
சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் 38 இடங்கள் முன்னேற்றம் கண்டு தனது டென்னிஸ் வரலாற்றில் 184-வது இடத்திற்கு முதல் முறையாக வந்துள்ளார்.
அன்டால்யா ஓபன் டென்னிஸ் போட்டியில் வெளிப்படுத்திய அபாரமான ஆட்டத்தைத் தொடர்ந்து தனக்கு கிடைத்த 57 புள்ளிகளால் ராம்குமார் இந்த முன்னேற்றத்தை அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்டால்யா ஓபன் டென்னிஸ் போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஆச்சரியமளிக்கும் வகையில், உலகின் 8-ஆம் நிலை வீரரான ஆஸ்திரியாவின் டொமினிக் தீமை வீழ்த்தினார். எனினும், காலிறுதியில் மூத்த வீரரான சைப்ரஸின் மார்கோஸ் பக்தாதீஸிடம் வீழ்ந்தார்.
ஆடவர் ஒற்றையர் தரவரிசையில் ராம்குமாருக்கு அடுத்தபடியாக, யூகி பாம்ப்ரி 222-வது இடத்திலும், பிரஜனேஷ் கன்னேஷ்வரன் 259-வது இடத்திலும், ஸ்ரீராம் பாலாஜி 291-வது இடத்திலும், சுமித் நாகல் 342-வது இடத்திலும் உள்ளனர்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா 21-வது இடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து பூரவ் ராஜா 57-வது இடத்திலும், திவிஜ் சரண் 57-வது இடத்திலும், லியாண்டர் பயஸ் 62-வது இடத்திலும், ஜீவன் நெடுஞ்செழியன் 90-வது இடத்திலும் உள்ளனர்.
மகளிர் இரட்டையர் தரவரிசையில் இந்தியாவின் சானியா மிர்ஸா 7-வது இடத்தில் தொடர்கிறார்.
மகளிர் ஒற்றையர் தரவரிசையில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா 274-வது இடத்திலும், கர்மன் கெளர் தன்டி 413-வது இடத்திலும் உள்ளனர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.