தோனியின் பேட்டிங்கை தான் ரசித்தது குறித்து கேஎல்.ராகுல் கருத்து தெரிவித்துள்ளார்.
இளம் கிரிக்கெட் வீரர் ராகுல், இந்த ஐபிஎல் சீசனில் அதிரடியாக ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து தனது திறமையை நிரூபித்து காட்டினார். இதுவரை டெஸ்ட் வீரராக பார்க்கப்பட்ட ராகுல், தற்போது அனைத்து வகை போட்டிகளுக்கான அணியிலும் இடம்பிடித்துவிட்டார்.
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக ஆடிய ராகுல், அதிரடியில் மிரட்டினார். 14 போட்டிகளில் ஆடி 659 ரன்களை குவித்தார். இந்த சீசன் பஞ்சாப் அணிக்கு சரியாக அமையவில்லை என்றாலும், ராகுலுக்கு சிறப்பாகவே அமைந்தது.
இந்நிலையில், ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த ராகுல், தோனியின் பேட்டிங்கை அவர் ரசித்தது குறித்து கருத்து தெரிவித்தார்.
தோனியின் பேட்டிங் குறித்து பேசிய ராகுல், நான் கிரிக்கெட் ஆடிய காலத்திலிருந்து தோனியின் பேட்டிங்கை தொலைக்காட்சியில் விரும்பி பார்ப்பேன். அவரின் ஒவ்வொரு ஷாட்டும் எதிரணியை பயமுறுத்தும். தோனியின் பேட்டிங்கும் அவர் அணியை வெல்ல வைப்பதும் பார்ப்பதற்கு அற்புதமாக இருக்கும். சென்னை அணியின் கேப்டனாக தோனியை மீண்டும் பார்ப்பதும் ஐபிஎல் கோப்பையை அவர் தலைமையிலான சென்னை அணி வெல்வதையும் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. தோனி அடிக்கும் சிக்ஸர்களை பார்த்துக்கொண்டே இருக்கலாம். தோனி அடிக்கும் ஷாட்களும், சிக்ஸர்களும் பல நேரங்களில் எதிரணிக்கு "ஹார்ட் அட்டாக்"கை வரவழைத்து இருக்கும் என ராகுல் தெரிவித்தார்.