சொதப்பிய முரளி விஜய், ரஹானே.. அவசரப்பட்ட விஹாரி!! வாய்ப்பை கப்புனு பற்றிக்கொண்ட பார்த்திவ் படேல்

By karthikeyan VFirst Published Nov 16, 2018, 3:58 PM IST
Highlights

நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான முதல் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் முரளி விஜய், ரஹானே ஆகியோர் பேட்டிங்கில் சொதப்பிவிட்டனர். 
 

நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான முதல் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் முரளி விஜய், ரஹானே ஆகியோர் பேட்டிங்கில் சொதப்பிவிட்டனர். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு தயாராகும் விதமாக நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராக இந்தியா ஏ அணி அதிகாரப்பூர்வமற்ற 4 நாட்கள் டெஸ்ட் போட்டிகளில் ஆடிவருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள ரஹானே, முரளி விஜய், பார்த்திவ் படேல், பிரித்வி ஷா, ஹனுமா விஹாரி ஆகிய 5 வீரர்களும் இந்தியா ஏ அணியில் ஆடிவருகின்றனர். 

முதல் போட்டி இன்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா ஏ அணியின் கேப்டன் ரஹானே பேட்டிங் தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா மற்றும் முரளி விஜய் ஆகிய இருவரும் களமிறங்கினர். இங்கிலாந்து தொடரில் பாதியில் அணியிலிருந்து நீக்கப்பட்டு, வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் புறக்கணிக்கப்பட்டு, பின்னர் ஆஸ்திரேலிய தொடரில் அணியில் இடம்பிடித்துள்ள முரளி விஜய், இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள தவறிவிட்டார். வெறும் 28 ரன்களுக்கே ஆட்டமிழந்தார் முரளி விஜய். 

இதையடுத்து பிரித்வி ஷாவுடன் மயன்க் அகர்வால் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக ஆடி அரைசதம் கடந்தனர். பிரித்வி ஷா 62 ரன்களிலும் அகர்வால் 65 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ரஹானே 12 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். ஆனால் ஹனுமா விஹாரியும் பார்த்திவ் படேலும் அருமையாக ஆடினர். சிறப்பாக ஆடி அரைசதம் கடந்து சதத்தை நோக்கி ஆடிய ஹனுமா விஹாரி, 86 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். மறுபுறம் சிறப்பாக ஆடிக்கொண்டிருக்கும் பார்த்திவ் படேல் 79 ரன்களுடன் களத்தில் உள்ளார். 

இன்றைய முதல் நாள் ஆட்டம் முடிய வெறும் 2 பந்துகளே எஞ்சியிருந்த நிலையில், விக்கெட்டை பறிகொடுத்தார் ஹனுமா விஹாரி. இதையடுத்து முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 340 ரன்களை எடுத்துள்ளது. 
 

click me!