புரோ கபடி: ஜெய்ப்பூர் அணியை புரட்டி எடுத்தது தெலுங்கு டைட்டன்ஸ்…

First Published Sep 28, 2017, 11:07 AM IST
Highlights
Pro Kabaddi Telugu Titans Taking Away From Jaipur


புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 96-வது ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 41-34 என்ற புள்ளிகள் கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியை வீழ்த்தியது.

புரோ கபடி லீக் சீசன் – 5 போட்டியின் 96-வது ஆட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தின் தொடக்கத்தில் இரண்டு அணிகளும் நிதானமாக ஆடியதால் முதல் ஐந்து நிமிடங்களில் இரு அணிகளும் 4-4 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தன.

பிறகு அபாரமாக ஆடிய தெலுங்கு டைட்டன்ஸ் கேப்டன் ராகுல் செளத்ரி, ஜெய்ப்பூர் வீரர்களை வீழ்த்தினார். இதனால் 11-வது நிமிடத்தில் ஜெய்ப்பூரை ஆல் ஔட்டாக்கிய தெலுங்கு டைட்டன்ஸ் 15-5 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றது. 

அதேநேரத்தில் ஜெய்ப்பூரின் முன்னணி வீரர்களான மஞ்ஜீத் சில்லார், ஜஸ்விர் சிங் ஆகியோர் முதல் 15 நிமிடங்களில் ஒரு புள்ளியைக் கூட பெறவில்லை.

ராகுல் செளத்ரி, 19-வது நிமிடத்தில் 10-வது புள்ளியைக் கைப்பற்ற முதல் பாதி ஆட்டநேர முடிவில் தெலுங்கு டைட்டன்ஸ் 23-11 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் ஜெய்ப்பூர் ரைடர் பவன்குமாரின் அபார ஆட்டத்தால் தெலுங்கு டைட்டன்ஸ் ஆல் ஔட்டானது.

ஜெய்ப்பூர் அணி தொடர்ந்து கடுமையாகப் போராடினாலும், புள்ளிகள் வித்தியாசத்தை மட்டுமே குறைக்க முடிந்தது. மாறாக தோல்வியிலிருந்து தப்ப முடியவில்லை.

இறுதியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணி 41-34 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றது.

இதன்மூலம் 5-வது வெற்றியைப் பெற்ற தெலுங்கு டைட்டன்ஸ் 38 புள்ளிகளுடன் 'பி' பிரிவில் 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 

tags
click me!