ஐபிஎல் ரசிகர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. செய்யவேண்டியது இதுதான்

First Published Mar 23, 2018, 12:02 PM IST
Highlights
price for best catcher from ipl audience


ஐபிஎல் தொடர், கடந்த 2008ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர்கள் உற்சாகமாக ஆதரவு அளித்து வருகின்றனர். 

ஐபிஎல் 11வது சீசன் அடுத்த மாதம் 7ம் தேதி தொடங்குகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக விளையாடாத சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த முறை களம் காண்கின்றன. தோனி தலைமையிலான சென்னை அணி மீண்டும் களமிறங்குவதால், சென்னை அணியின் ரசிகர்களும் தோனியின் ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.

ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும், தோனி தலைமையிலான முன்னாள் சாம்பியன் சென்னை அணியும் மோதுகின்றன.

வழக்கமாக சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு பரிசளிக்கப்படுவதுதான் நடைமுறை. ஆனால், இந்தமுறை ரசிகர்களுக்கும் பரிசு காத்திருக்கிறது.

ஐபிஎல் தொடரில் சிறந்த கேட்ச் பிடிக்கும் பார்வையாளருக்கு கார் பரிசாக வழங்கப்பட இருக்கிறது. பொதுவாக கிரிக்கெட்டை பார்க்க வரும் பார்வையாளர்களில் சிலர், தங்களை நோக்கி வரும் பந்தை அசாத்தியமாக கேட்ச் பிடித்து கவனத்தை ஈர்ப்பர். அப்படிப்பட்டவர்களை அங்கீகரிக்கும் விதமாக சிறந்த கேட்ச் பிடிப்பவருக்கு கார் பரிசாக வழங்கப்பட இருக்கிறது.

அதற்கான ஒப்பந்தத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் அற்புதமான கேட்ச் பிடித்து அசத்தும் பார்வையாளருக்கு கார் பரிசாக வழங்கப்படுகிறது. 
 

click me!