இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்திய ஆயுதம்.. போட்டுடைத்த நியூசிலாந்து கேப்டன்!!

By karthikeyan VFirst Published Jan 31, 2019, 1:35 PM IST
Highlights

போல்ட்டின் வேகத்தை சமாளிக்க முடியாமல் இந்திய அணி சரிந்தது. வெறும் 92 ரன்களில் ஆல் அவுட்டானது இந்திய அணி. 93 ரன்கள் என்ற இலக்கை 15வது ஓவரிலேயே எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றியை பதிவு செய்தது. 
 

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணி ஆடிவருகிறது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆகியவற்றில் இந்திய அணி ஆடிவருகிறது. 

முதலில் ஒருநாள் தொடர் நடந்துவரும் நிலையில், முதல் மூன்று போட்டிகளில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே நியூசிலாந்து அணியின் மீது ஆதிக்கம் செலுத்தி ஆடிய இந்திய அணி, 3 போட்டிகளிலும் வென்று தொடரை வென்றுவிட்டது. 3-0 என தொடரை வென்றுவிட்ட நிலையில், நான்காவது போட்டி ஹாமில்டனில் இன்று நடந்தது. 

இந்த போட்டியில், முதல் மூன்று போட்டிகளில் ஆடியதற்கு அப்படியே நேர்மாறாக ஆடியது இந்திய அணி. முதலில் பேட்டிங் ஆடிய இந்திய தொடக்கம் முதலே விக்கெட்டுகளை மளமளவென இழந்தது. ஹாமில்டன் ஆடுகளத்தில் பந்துகள் நன்றாக ஸ்விங் ஆகின. அதை நன்கு பயன்படுத்தி அபாரமாக பந்துவீசினார் டிரெண்ட் போல்ட். போல்ட்டின் வேகத்தை சமாளிக்க முடியாமல் இந்திய அணி சரிந்தது. வெறும் 92 ரன்களில் ஆல் அவுட்டானது இந்திய அணி. 93 ரன்கள் என்ற இலக்கை 15வது ஓவரிலேயே எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றியை பதிவு செய்தது. 

முதல் 3 போட்டிகளிலும் படுதோல்வியை சந்தித்த நியூசிலாந்து அணிக்கு இந்த வெற்றி உத்வேகம் அளிக்கக்கூடியதாக அமைந்துள்ளது. அதேநேரத்தில் 3 போட்டிகளில் அபாரமாக ஆடி அனைத்து வகையிலும் நியூசிலாந்து அணி மீது ஆதிக்கம் செலுத்தி ஆடிய இந்திய அணிக்கு இந்த படுதோல்வி தக்க பாடம். இந்த போட்டி முழுவதுமே நியூசிலாந்து அணிதான் ஆதிக்கம் செலுத்தியது. முதல் மூன்று போட்டிகளில் இந்திய அணி செய்ததை இந்த போட்டியில் நியூசிலாந்து செய்தது. 

போட்டிக்கு பின்னர் பேசிய நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், இந்த ஆடுகளம் இப்படி இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவேயில்லை. இந்திய அணியை 92 ரன்களில் சுருட்டியது சிறப்பான சம்பவம். எங்கள் பவுலர்கள் சரியான இடங்களில் பந்துவீசினர். எல்லா கிரெடிட்டும் பவுலர்களுக்குத்தான். விரைவில் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டியது அவசியம். நாங்களும் எப்போதுமே விரைவில் விக்கெட்டுகளை வீழ்த்தத்தான் முயற்சிப்போம். ஆனால் இந்த போட்டியில் அது கைகூடியது மகிழ்ச்சி. பந்து நன்றாக ஸ்விங் ஆனது. அதையே ஆயுதமாக பயன்படுத்தி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தினோம். அதனால்தான் இந்திய அணிக்கு நெருக்கடியை கொடுக்க முடிந்தது. எல்லா போட்டிகளிலுமே ஜெயிப்பதற்காகத்தான் ஆடுகிறோம். எனினும் இந்த போட்டியில் அருமையாக ஆடினோம். நிகோல்ஸ் சிறப்பாக பேட்டிங் ஆடினார். வலுவான இந்திய அணியை வீழ்த்தி வெற்றி கண்டது சிறப்பானது, மகிழ்ச்சியாக இருக்கிறது என்று வில்லியம்சன் தெரிவித்தார். 
 

click me!