தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் சுஷில் குமார், சாக்ஷி மாலிக், கீதா போகத் ஆகியோர் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளனர்.
தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவருக்கான 74 கிலோ பிரிவில் போட்டியிட்ட சுஷில் குமார், தனது முதல் சுற்றில் மிஸாரத்தின் லால்மல்சாவ்மாவை எதிர்கொண்டு வெற்றிப் பெற்றார். அதன்பின்னர் நடைப்பெற்ற 2-ஆவது சுற்றில் முகுல் மிஸ்ராவையும் தோற்கடித்து வெற்றி கண்டார்.
இந்த நிலையில் சுஷிலுடன் காலிறுதியில் மோதிய பிரவீண், அரையிறுதியில் மோதிய சச்சின் தாஹியா ஆகியோர் அடுத்தடுத்து போட்டியிலிருந்து விலக, சுஷில் குமார் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
இறுதிச்சுற்றில் அவரது போட்டியாளர் விலக, மூன்று சுற்றிலும் மொத்தமாக இரண்டு நிமிடங்கள், 33 விநாடிகளே போட்டியிட்டு சுஷில் தங்கம் வென்றார்.
மகளிருக்கான 62 கிலோ பிரிவில் சாக்ஷி மாலிக் மற்றும் பூஜா தோமர் மோதினர். இதில், பூஜாவை வீழ்த்தி தங்கம் வென்று கர்ஜித்தார் சாக்ஷி மாலிக்.
அதேபோன்று 59 கிலோ பிரிவு இறுதிச்சுற்றில் ரவிதாவுடன் மோதினார் கீதா போகத். இருவருக்கும் இடையே நடைப்பெற்ற ஆட்டத்தில் ரவிதாவை வீழ்த்தினார் கீதா போகத். இதன்மூலம் தங்கப் பதக்கத்தை தன்வசமாக்கினார் கீதா.