என்னை டீம்ல இருந்து தூக்குனதுக்கு அப்புறம் யாருமே என்கிட்ட பேசல!! முரளி விஜய் வேதனை

By karthikeyan VFirst Published Oct 4, 2018, 2:02 PM IST
Highlights

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து பாதியில் நீக்கப்பட்ட பிறகு, அதுகுறித்து தன்னிடம் யாருமே இதுவரை பேசவில்லை என தமிழக வீரர் முரளி விஜய் வேதனை தெரிவித்துள்ளார்.
 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து பாதியில் நீக்கப்பட்ட பிறகு, அதுகுறித்து தன்னிடம் யாருமே இதுவரை பேசவில்லை என தமிழக வீரர் முரளி விஜய் வேதனை தெரிவித்துள்ளார்.

இந்திய டெஸ்ட் அணியின் முக்கியமான வீரராக திகழ்ந்த முரளி விஜய், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சொதப்பினார். கடந்த 2014ம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் சிறப்பாக ஆடிய முரளி விஜய், அண்மையில் நடந்த தொடரில் சொதப்பினார். 

இங்கிலாந்து தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் 4 இன்னிங்ஸ்களில் ஆடி வெறும் 26 ரன்கள் மட்டுமே எடுத்தார். இங்கிலாந்தில் ஸ்விங் பந்துகளை எதிர்கொண்டு ஆட திணறினார். இந்த 26 ரன்களுமே முதல் டெஸ்டில் எடுக்கப்பட்டதுதான். லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இரண்டாவது போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலுமே டக் அவுட்டானார். 

முரளி விஜயின் மோசமான ஆட்டத்தால் எஞ்சிய டெஸ்ட் போட்டிகளிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக இளம் வீரர் பிரித்வி ஷா அணியில் சேர்க்கப்பட்டார். அதன்பிறகு முரளி விஜய், கவுண்டி கிரிக்கெட்டில் ஆடினார். தற்போது வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அணியில் சேர்க்கப்படாததால், விஜய் ஹசாரே தொடரில் ஆடிவருகிறார். முரளி விஜய் டெஸ்ட் கிரிக்கெட்டில் 4000 ரன்களை எட்ட இன்னும் 67 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டியிருக்கிறது. 

ஆனால் இனிமேல் முரளி விஜய் மீண்டும் இந்திய அணியில் இடம் கிடைப்பது சந்தேகம்தான். ஏனென்றால் தொடக்க வீரருக்கான போட்டி கடுமையாக உள்ளது. ரோஹித் சர்மாவை டெஸ்ட் அணியிலும் சேர்க்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்துள்ளன. தவான், மயன்க் அகர்வால், பிரித்வி ஷா என ஒரு படையே தொடக்க வீரர்களுக்கான போட்டியில் உள்ளது. இவர்களை எல்லாம் மீறி மீண்டும் முரளி விஜய் டெஸ்ட் அணியில் சேர்க்கப்படுவது சந்தேகமான ஒன்றுதான். 

விஜய் ஹசாரேவில் ஆடிவரும் முரளி விஜய், அணியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து பேசுகையில், இங்கிலாந்து தொடரில் பாதியில் அணியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, அதுகுறித்து தேர்வுக்குழு தலைவரோ அல்லது மற்றவர்களோ என்னிடம் எதுவுமே பேசவில்லை. இதுவரை யாருமே என்னை தொடர்புகொண்டு பேசவில்லை. அணி நிர்வாகத்தினரிடம் இங்கிலாந்தில் இருக்கும்போது நான் பேசினேன். அவ்வளவுதானே தவிர வேறு யாருமே என்னிடம் பேசவில்லை என முரளி விஜய் தெரிவித்துள்ளார். 
 

click me!