மும்பையின் தயவால், ராஜஸ்தான் அணி பிளே ஆஃபிற்குள் நுழைந்தது. இன்றுடன் லீக் போட்டிகள் முடிவடைகின்றன. ஹைதராபாத், சென்னை, கொல்கத்தா அணிகள் பிளே ஆஃபிற்கு தகுதி பெற்றவிட்ட நிலையில், நான்காவது இடத்தில் ராஜஸ்தான் அணி உள்ளது.
இன்றைய டெல்லிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் ராஜஸ்தானை பின்னுக்கு தள்ளி பிளே ஆஃபிற்கு தகுதி பெறலாம் என்ற நிலையில், மும்பை அணி, டெல்லியுடன் மோதியது. மும்பைக்கு முக்கியமான போட்டியில், டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
பிரித்வி ஷா, மேக்ஸ்வெல், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் சோபிக்கவில்லை. ரிஷப் பண்ட் மற்றும் விஜய் சங்கரின் அதிரடியால் டெல்லி அணி, 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. ரிஷப் பண்ட் 64 ரன்களும் விஜய் சங்கர் 43 ரன்களும் எடுத்தனர்.
175 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணியின் சூர்யகுமார் யாதவ் முதல் ஓவரிலேயே அவுட்டானார். இஷான் கிஷான் 5 ரன்களிலும் பொல்லார்டு 7 ரன்களிலும் குருணல் பாண்டியா 4, ரோஹித் சர்மா 13 ரன்களிலும் அவுட்டாகினர்.
ஹர்திக் பாண்டியாவும் பென் கட்டிங்கும் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். பாண்டியா, 27 ரன்களில் அவுட்டானார். போட்டி மும்பையின் கையிலிருந்து மீறிபோன சமயத்தில், பென் கட்டிங் அதிரடியாக ஆடி நம்பிக்கை கொடுத்தார். கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரின் முதல் பந்தை கட்டிங் சிக்ஸர் விளாசினார். 37 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கடைசி ஓவரின் இரண்டாவது பந்தில் கட்டிங் ஆட்டமிழந்தார். 3 பந்துகளுக்கு 12 ரன்கள் தேவை என்ற நிலையில், மூன்றாவது பந்தில் பும்ரா ஆட்டமிழந்தார். இதையடுத்து மும்பை அணி, 19.3 ஓவருக்கு 163 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
டெல்லி அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் மும்பை தோற்றதால் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது. அதனால் 14 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் அணி பிளே ஆஃபிற்கு தகுதி பெற்றது.
சென்னை அணியுடன் ஆடிவரும் பஞ்சாப் அணி, சென்னையை வீழ்த்தி வெற்றி பெற்றாலும் ராஜஸ்தான் அணியை விட நெட் ரன்ரேட் மிகவும் குறைவாக உள்ளதால் பிளே ஆஃபிற்கு தகுதி பெற வாய்ப்பில்லை. மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தால் மட்டுமே பஞ்சாப் பிளே ஆஃபில் நுழைய முடியும். ஆனால் சென்னை அணியிடம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்ய வாய்ப்பில்லை.