
கால்பந்து உலகின் ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஸ்பெயினுக்கு எதிரான தோல்வி மிகுந்த வலியைத் தந்தாலும், தனது அணியின் பயணம் மற்றும் சாதனைகள் குறித்து பெருமைப்படுவதாகக் கூறியுள்ளார். தொடர்ந்து இரண்டு முறை உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது, நாட்டு மக்களின் ஆதரவு என அனைத்தையும் அவர் நினைவுகூர்ந்தார். மேலும், ரசிகர்களின் ஆதரவுச் செய்திகளுக்கு நன்றி தெரிவித்ததோடு, சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணிக்கும் வாழ்த்து தெரிவித்தார்.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு உலகக்கோப்பையை வென்ற அர்ஜென்டினா, இந்த முறையும் கோப்பையைத் தக்கவைக்க கடுமையாகப் போராடியது. எப்போதும் அசத்தும் லியோனல் மெஸ்ஸியின் தலைமையில், அர்ஜென்டினா அணி நாக்-அவுட் சுற்றுகளில் அபாரமாக விளையாடியது. ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில், எகிப்துக்கு எதிராக இரண்டு கோல்கள் பின்தங்கியிருந்தும் மீண்டு வந்து வென்றது. அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக கடைசி நேரத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இருப்பினும், இறுதிப்போட்டியில் லூயிஸ் டி லா ஃபுயன்டே தலைமையிலான ஸ்பெயின் அணி சிறப்பாக விளையாடி, நடப்பு சாம்பியனான அர்ஜென்டினாவை வீழ்த்தி மீண்டும் உலகக்கோப்பையைக் கைப்பற்றியது. இதனால் மெஸ்ஸியின் உலகக்கோப்பை கனவு முடிவுக்கு வந்தது. அநேகமாக இதுதான் அவரின் கடைசி உலகக் கோப்பை என குறப்படுகிறது. அவர் தோல்வியுடன் விடைபெற்றது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.
இதுகுறித்து மெஸ்ஸி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "இந்த வலி தாங்க முடியாதது. இந்தக் காயம் ஆற சிறிது காலம் ஆகும். ஆனால், நாங்கள் சாதித்த நல்ல விஷயங்களையும் நினைவில் வைத்திருக்கிறேன். நாங்கள் வந்த போட்டிகள், எங்களுடைய முழு உழைப்பையும் கொடுத்த தருணங்கள், இவை அனைத்தும் எங்கள் நினைவுகளில் என்றென்றும் இருக்கும். ஒட்டுமொத்த நாட்டின் ஆதரவும், இந்த அணியின் கடின உழைப்பும் தான், மீண்டும் ஒருமுறை உலகின் சிறந்த அணிகளில் ஒன்றாக எங்களை மாற்றியது. நாங்கள் சாதித்ததை இன்று முழுமையாக உணரமுடியாமல் இருக்கலாம், ஆனால் இந்த அணி தொடர்ந்து இரண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டிகளில் விளையாடியுள்ளது," என்று உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
"அனைவரின் வாழ்த்துகளுக்கும், ஆதரவுச் செய்திகளுக்கும் என் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி. மீண்டும் ஒருமுறை, அர்ஜென்டினியர்கள் என்ற பெருமிதத்துடன் ஒரு நாடாக நாங்கள் ஒன்றுபட்டோம். சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணிக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நியூயார்க்கில் உள்ள நியூ ஜெர்சி ஸ்டேடியத்தில் நடந்த இந்தப் போட்டியில், 106-வது நிமிடத்தில் ஃபெரான் டோரஸ் அடித்த கோல், ஸ்பெயின் அணியின் வெற்றியை உறுதி செய்தது. இது ஸ்பெயின் வெல்லும் இரண்டாவது உலகக்கோப்பை பட்டமாகும். இந்த வெற்றியின் மூலம், தோல்வியே சந்திக்காமல் தொடர்ச்சியாக 38 போட்டிகளில் வென்று, தனது ஐரோப்பிய சாதனையை ஸ்பெயின் அணி நீட்டித்துள்ளது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.