3 ரன்னை எடுக்கவிடாமல் கோலியை தடுத்த ஸ்டார்க்.. அகர்வால், புஜாரா அரைசதம்!! வலுவான நிலையில் இந்திய அணி

By karthikeyan VFirst Published Dec 26, 2018, 12:58 PM IST
Highlights

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்துள்ளது. 
 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்துள்ளது. 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக அறிமுக வீரர் மயன்க் அகர்வால் மற்றும் ஹனுமா விஹாரி களமிறங்கினர். 

முரளி விஜய் மற்றும் ராகுல் நீக்கப்பட்டு புதிய தொடக்க ஜோடியாக களமிறங்கிய விஹாரி - அகர்வால் மீது பெரும் எதிர்பார்ப்பும் நெருக்கடியும் இருந்தது. ஆனால் இருவருமே அந்த நெருக்கடியை சமாளித்து நிதானமாக தொடங்கினர். இதுவரை மிடில் ஆர்டரில் ஆடிவந்த விஹாரி, இன்றைய போட்டியில் புதிய ரோலை ஏற்றிருந்தார். 66 பந்துகளை எதிர்கொண்டு 8 ரன்கள் மட்டுமே எடுத்து பாட் கம்மின்ஸின் பவுன்ஸரில் வீழ்ந்தார் விஹாரி. 

மறுமுனையில் நிதானமாகவும் தெளிவாகவும் ஆடிவந்த மயன்க் அகர்வால் அரைசதம் கடந்தார். அவருக்கு புஜாரா நல்ல ஒத்துழைப்பு கொடுத்து ஆடினார். அரைசதம் கடந்த மயன்க், சதத்தை நோக்கி பயணித்தார். அறிமுக போட்டியிலேயே அதுவும் ஆஸ்திரேலிய மண்ணில் சதமடிக்கும் வாய்ப்பை பெற்றிருந்த மயன்க், துரதிர்ஷ்டவசமாக டீ பிரேக்கிற்கு முன்பாக 76 ரன்களில் கம்மின்ஸின் பந்தில் ஆட்டமிழந்தார். 

இதையடுத்து புஜாராவுடன் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக ஆடி பார்ட்னர்ஷிப் அமைத்தது. நிதானமாகவும் வழக்கம்போலவே பொறுப்புடனும் ஆடிய புஜாரா, அரைசதம் கடந்தார். மறுமுனையில் அரைசதத்தை நெருங்கிய கோலியால், முதல் நாள் ஆட்டம் முடியும்வரை அரைசதம் அடிக்க முடியவில்லை. 

47 ரன்களில் இருந்த கோலிக்கு 87 மற்றும் 89வது ஓவர்களை வீசிய மிட்செல் ஸ்டார்க், தனது வேகத்தால் கடும் நெருக்கடி கொடுத்தார்.  80வது ஓவருக்கு பிறகு இரண்டாவது புதிய பந்தை எடுத்ததும் ஸ்டார்க்கின் பந்துவீச்சு மிரட்டலாக இருந்தது. அனல் பறக்க வீசினார் ஸ்டார்க்.  87வது ஓவரில் கோலியை திணறடித்த ஸ்டார்க், ரன் ஏதும் எடுக்க விடவில்லை. இன்றைய ஆட்டத்தின் கடைசி ஓவரான 89வது ஓவரிலும் கோலியை ரன் அடிக்க அனுமதிக்கவில்லை. அதனால் கோலி அரைசதம் அடிக்க முடியாமல் 47 ரன்களில் களத்தில் உள்ளார். 

முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 47 ரன்களுடனும் புஜாரா 68 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

இந்திய அணி 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் கோலியும் புஜாராவும் களத்தில் நிலைத்துவிட்டனர். இவர்களுக்கு அடுத்து அடித்து ஆடக்கூடிய ரஹானே, ரோஹித், ரிஷப் ஆகியோர் உள்ளனர். எனவே நாளை குறைந்தது 250 ரன்கள் அடிக்கக்கூடும். அதனால் இந்த ரிதத்தை விட்டுவிடாமல் ஆடினால் எப்படியும் முதல் இன்னிங்ஸில் 450 முதல் 500 ரன்களை எட்டுவதற்கான வாய்ப்பு உள்ளது. 
 

click me!