முதல்வரின் கையால் பரிசு பெற்ற மாரியப்பன்…

First Published Dec 24, 2016, 12:06 PM IST
Highlights


மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதல் பிரிவில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு ஊக்கத் தொகையாக தமிழக அரசின் சார்பில் ரூ.2 கோடி வழங்கப்பட்டது.

தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்வில், அதற்கான காசோலையை மாரியப்பனிடம், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:

“பன்னாட்டு - அகில இந்திய அளவில் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில், வெற்றி பெறும், தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில், உயரிய ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.

அந்த வகையில், பிரேசில் நாட்டின், ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்ற, பாரா ஓலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த த. மாரியப்பன் தங்கப் பதக்கம் வென்றார்.

அவருக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.2 கோடி உயரிய ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று கடந்த செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி, மாரியப்பனுக்கு ஊக்க தொகையான ரூ.2 கோடியை, முதல்வர் ஒ. பன்னீர்செல்வம் வெள்ளிக்கிழமை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் ராஜேந்திரகுமார், விளையாட்டு வீரர் மாரியப்பனின் பயிற்சியாளர் சத்யநாராயணா ஆகியோர் உடனிருந்தனர்.

tags
click me!