எதிர்வரும் காலங்களில் நேர்மையான கிரிக்கெட்டை கொண்டுவருவோம் - முன்னாள் ஆஸ்திரேலியா கேப்டன்...

First Published Mar 27, 2018, 10:58 AM IST
Highlights
Lets bring honest cricket in the future - former Australian captain


தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது பந்தை சேதப்படுத்தியது தொடர்பாக ஸ்டீவ் ஸ்மித் மன்னித்து நேர்மையான கிரிக்கெட்டை எதிர்வரும் காலங்களில் கொண்டுவருவோம் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் வலியுறுத்தியுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 4 டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா விளையாடி வருகிறது. கடந்த 1-ஆம் தேதி தொடங்கிய முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 118 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட்டில் தென் ஆப்பிரிக்கா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்த நிலையில், 3-வது டெஸ்ட் ஆட்டம் கடந்த 22-ஆம் தேதி தொடங்கியது. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் பேன்கிராஃப்ட் பந்தை சேதப்படுத்த முயன்றது விடியோவில் பதிவாகியது. 

இது ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் உதவியுடன் செய்யப்பட்டதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்தக் குற்றச்சாட்டை ஸ்மித்தும், பேன்கிராஃப்டும் ஒப்புக் கொண்டுள்ளனர். அத்துடன், அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஸ்மித்தும், துணை கேப்டன் பொறுப்பிலிருந்து டேவிட் வார்னரும் விலகிக் கொள்வதாக அறிவித்தனர்.

இந்நிலையில், சிட்னியில் செய்தியாளர்களிடம் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியதாவது: 

"ஸ்டீவ் ஸ்மித்துக்காக வருந்துகிறேன். அவர் செய்தது நியாயமே கிடையாது. கடுமையான விளைவுகளை சம்பந்தப்பட்ட வீரர்கள் எதிர்கொள்ள நேரிடும் என்பதிலும் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. எனவே, அவர்களை குற்றம்சாட்டியது போதுமானது. அவர்கள் செய்த தவறை மன்னிப்போம். இதுபோன்ற தவறுகள் இனி நடக்கக் கூடாது. நேர்மையான கிரிக்கெட்டை எதிர்வரும் காலங்களில் நாம் கொண்டுவருவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்" என்று அவர் தெரிவித்தார். 
 

tags
click me!