டிவில்லியர்ஸுடன் பேட்டிங் செய்வதே எனக்கு கிடைத்த பாக்கியம் என பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
டெல்லி பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் டெல்லி மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற பெங்களூரு கேப்டன் கோலி, முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். ரிஷப் பண்ட்டின் அதிரடி அரைசதம், அபிஷேக் நாயரின் அதிரடியால், டெல்லி அணி 181 ரன்களை குவித்தது.
182 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணியின் தொடக்க வீரர்கள் மோயின் அலி மற்றும் பார்த்திவ் படேல் முறையே 1 மற்றும் 6 ரன்களில் வெளியேறினர். அதன்பிறகு விராட் கோலியும் டிவில்லியர்ஸும் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 118 ரன்கள் சேர்த்தது. 70 ரன்களில் கோலி அவுட்டாக, டிவில்லியர்ஸ் அதிரடியை தொடர்ந்தார். இறுதிவரை ஆட்டமிழக்காத டிவில்லியர்ஸ் 72 ரன்கள் குவித்த டிவில்லியர்ஸ், அணியையும் வெற்றியடைய செய்தார்.
19 ஓவருக்கே இலக்கை எட்டி பெங்களூரு வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக டிவில்லியர்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.
போட்டிக்கு பிறகு பேசிய பெங்களூரு கேப்டன் விராட் கோலி, 160 ரன்களுக்கு உள்ளாகவே சுருட்ட நினைத்தோம். ஆனால் நாங்கள் பவுலிங்கை முடித்தவிதம் எனக்கு திருப்தியில்லை. இன்னிங்ஸ் பிரேக்கின்போது, இந்த இலக்கை நம்மால் எட்டமுடியும் என டிவில்லியர்ஸ் ஊக்கமளித்தார். அவர் அளித்த ஊக்கம் எனக்கு உதவியாக இருந்தது. டிவில்லியர்ஸுடன் பேட்டிங் செய்வதே எனக்கு கிடைத்த பாக்கியம். அதிக ரன்ரேட்டை பெறும் விதமாக சில ஓவர்களுக்கு முன்னதாகவே இலக்கை எட்டி வெற்றி பெற நினைத்தோம். ஆனாலும் இந்த இரண்டு புள்ளிகள் மிக முக்கியமானவை என கோலி தெரிவித்தார்.