
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டி மழை குறுக்கிட்டதால் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டி20 போட்டி பிரிஸ்பேனில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பவுலிங் தேர்வு செய்ததால் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீரர்களாக ஷார்ட் மற்றும் அந்த அணிய்ன் கேப்டன் ஃபின்ச் ஆகிய இருவரும் களமிறங்கினர். இருவருமே தொடக்கத்தில் பும்ரா மற்றும் புவனேஷின் பந்தில் ஸ்கோர் செய்ய முடியாமல் திணறினர். பும்ரா வீசிய 4வது ஓவரின் முதல் பந்தில் ஃபின்ச் கொடுத்த கேட்ச் வாய்ப்பை கோலி தவறவிட்டார். களத்தில் பெரும்பாலும் தவறிழைக்காத கோலி, அந்த கேட்ச்சை தவறவிட்டு ஆச்சரியப்படுத்தினார்.
இதையடுத்து 5வது ஓவரை வீசினார் இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது. அதுதான் அவர் வீசிய முதல் ஓவர். தான் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே ஷார்ட்டை வீழ்த்தினார் கலீல் அகமது. இதையடுத்து களத்திற்கு வந்த கிறிஸ் லின் அதிரடியாக ஆடி பவுண்டரியும் சிக்ஸர்களுமாக விளாசினார். தொடக்கம் முதலே திணறினாலும் தட்டுத்தடுமாறி ஒருசில பவுண்டரிகளை அடித்து ஆடிய ஃபின்ச், குல்தீப்பின் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். 27 ரன்களில் ஃபின்ச்சும் ஆட்டமிழக்க லின்னுடன் மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்தார்.
சிக்ஸர்களாக விளாசிவந்த லின்னையும் வெளியேற்றினார் குல்தீப். 37 ரன்கள் எடுத்த நிலையில், குல்தீப்பின் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் லின். இதையடுத்து அவர் விட்டுச்சென்ற வேலையை மேக்ஸ்வெல் தொடர்ந்தார்.மேக்ஸ்வெல் 4 சிக்ஸர்களுடன் 23 பந்துகளில் 46 ரன்களும், மார்கஸ் ஸ்டோய்னிஸ் 18 பந்துகளில் 31 ரன்களும் எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டது.
ஆஸ்திரேலிய அணி 16.1 ஓவருக்கு 153 ரன்கள் எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது. அதன்பிறகு இன்னும் தொடங்கவில்லை.