
சென்னை,
உலக கோப்பை கபடி வெற்றியின் மூலம் எனக்கு கிடைத்த தங்கப்பதக்கத்தை முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சமர்ப்பிக்கிறேன் என்று கபடி வீரர் சேரலாதன் தெரிவித்தார்.
குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் சில தினங்களுக்கு முன்பு நடந்த உலக கோப்பை கபடி போட்டியில் இந்திய அணி பலம் வாய்ந்த ஈரானை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றது. இதன் மூலம் இந்தியா தொடர்ந்து 3–வது முறையாக உலக கோப்பையை வென்று ‘ஹாட்ரிக்’ சாதனையும் படைத்தது.
வெற்றி பெற்ற இந்திய கபடி அணியில் தமிழகத்தை சேர்ந்த ஒரே வீரரான சேரலாதன் இடம் பெற்றிருந்தார். இவர் தஞ்சாவூர் மாவட்டம் திருச்சனம் பூண்டி கிராமத்தை சேர்ந்தவர். சேரலாதன் ஏற்கனவே தெற்காசிய போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியில் இடம் பெற்று இருந்தார்.
தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்திய கபடி அணியில் இடம்பெற்று உலக கோப்பை வெற்றிக்கு பங்காற்றினார், சேரலாதன். இந்தநிலையில் இந்திய கபடி அணியின் வெற்றி கொண்டாட்டங்களை நிறைவு செய்துவிட்டு விமானம் மூலம் அவர் நேற்று சென்னை திரும்பினார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து அங்கிருந்து நேராக சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சேரலாதன் காலை 11.10 மணிக்கு வந்தார். உள்ளே சென்ற அவர் அமைச்சர்கள் மற்றும் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களிடம் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரித்துவிட்டு 11.30 மணி அளவில் வெளியே வந்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது சேரலாதன் கூறியதாவது:–
உலக கோப்பையை வென்ற மகிழ்ச்சியோடு முதலமைச்சர் ஜெயலலிதாவை பார்க்க வந்தேன். அவர் தற்போது நலமுடன் உள்ளதாக அமைச்சர்கள், மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுதான் எனக்கு மிகப்பெரிய சந்தோஷம். முதலமைச்சர் ஜெயலலிதா செய்த உதவியால் இன்று பல்வேறு விளையாட்டு வீரர்கள் மேம்பட்டு இருக்கின்றனர்.
இவை அனைத்தும் மீண்டும் தொடர முதலமைச்சர் ஜெயலலிதா விரைவில் குணமடைந்து வரவேண்டும். அதற்காக இறைவனை பிரார்த்திக்கிறேன். அவர் முழுமையாக குணமடைந்து வந்த பின்பு மீண்டும் ஒரு முறை அவரை வந்து சந்திக்க விரும்புகிறேன். உலக கோப்பை கபடி வெற்றியின் மூலம் எனக்கு கிடைத்த தங்கப்பதக்கத்தை முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சமர்ப்பிக்கிறேன்” என்று அவர் கூறினார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.