அதீத நம்பிக்கையா? அலட்சியமா? ஜடேஜாவின் செயலால் அஷ்வின் அதிர்ச்சி.. கோலி கோபம்!!

By karthikeyan VFirst Published Oct 6, 2018, 10:07 AM IST
Highlights

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முதல் இன்னிங்ஸில் ஹெட்மயரை ஜடேஜா அலட்சியமாக ரன் அவுட் செய்தது கோலியை கோபமாக்கியது. 
 

வெஸ்ட் இண்டீஸ் அணியின் முதல் இன்னிங்ஸில் ஹெட்மயரை ஜடேஜா அலட்சியமாக ரன் அவுட் செய்தது கோலியை கோபமாக்கியது. 

இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. ராஜ்கோட்டில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி பிரித்வி ஷா, கோலி, ஜடேஜா ஆகிய மூவரின் அபார சதம் மற்றும் ரிஷப் பண்ட் மற்றும் புஜாரா ஆகியோரின் சிறப்பான அரைசதம் ஆகியவற்றால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 649 ரன்களை குவித்தது. 

9 விக்கெட் இழப்பிற்கு 649 ரன்கள் எடுத்து இந்திய அணி முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்திய அணியின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் எடுத்தது. 

நேற்றைய ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் இளம் வீரர் ஹெட்மயரை ஜடேஜா ரன் அவுட்டாக்கிய விதம் அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. ஜடேஜா ஒரு உலகத்தரம் வாய்ந்த ஃபீல்டர் என்றாலும் இதுபோன்ற காரியங்களில் ஈடுபடும்போது தப்பித்தவறி ஏதேனும் தவறு நடந்துவிட்டால், அது அணியை பாதிக்கும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

அஷ்வின் வீசிய 12வது ஓவரின் 5வது பந்தை ஹெட்மயர் மிட் ஆன் திசையில் அடிக்க, அந்த பந்தை ஜடேஜா பிடித்துவிட்டார். அதற்கு ரன் எடுக்க முயன்றபோது, மறுமுனையில் இருந்த அம்பிரிஷ் வேகமாக ஓட பாதியில் ஹெட்மயர் மறுத்துவிட்டார். பாதி பிட்ச்சை தாண்டி ஓடிவிட்டதால் பேட்டிங் முனையை நோக்கி அம்பிரிஷ் ஓட, ஹெட்மயரும் பேட்டிங் முனையை அடைய முயன்றார். இருவருமே பேட்டிங் முனையில் இருந்தனர். ஆனால் தனக்கு முன் அம்பிரிஷ் பேட்டிங் கிரீஸை அடைந்துவிட்டதால், மீண்டும் மறுமுனைக்கு ஓட முயன்றார் ஹெட்மயர். 

இதற்கிடையே இருவரும் ஒரு முனையில் இருந்ததால் அசால்ட்டாக பந்தை எடுத்துக்கொண்டு வந்தார் ஜடேஜா. ஸ்டம்பிற்கு அருகே நின்ற அஷ்வின் தன்னிடம் பந்தை தூக்கிப்போடுவார் என்று எதிர்பார்த்தார். ஆனால் ஜடேஜா அவ்வாறு செய்யாமல் அசால்ட்டாக வந்தார். அதைக்கண்ட ஹெட்மயர் வேகமாக ஓடிவந்தார். கடைசி நேரத்தில் ஹெட்மயர் கிரீஸிடம் வருகையில் ஸ்டம்பில் பந்தை போட்டு ஜடேஜா ரன் அவுட் செய்தார். 

ஒருவேளை கடைசி நேரத்தில் பந்து ஸ்டம்பில் சரியாக படாமல் போயிருந்தால், அவர்களை வைத்து நகைச்சுவை செய்ய விரும்பிய ஜடேஜாவின் செயலால் இந்திய அணி நகைப்புக்கு ஆளாகியிருக்கும். ஜடேஜாவின் செயலை கண்டு அஷ்வின் அதிர்ந்துபோனார். அந்த அதிர்ச்சியில் இருந்து சில நிமிடங்கள் கழித்துத்தான் அஷ்வின் வெளிவந்தார். கோலியும் ஜடேஜாவிடம், பந்து ஸ்டம்பில் படாமல் போயிருந்தால் என்ன செய்வது? என்பதுபோல அதிருப்தியை வெளிப்படுத்தினார். 

ஆனாலும் ஜடேஜா மிஸ்டேக் செய்யாததால் அது பெரிய விஷயமாக ஆகாமல் போய்விட்டது. 
 

click me!