
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னை - ஜாம்ஷெட்பூர் இடையே நடைப்பெற்ற விறுவிறுப்பான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.
பத்து அணிகள் பங்கேற்றுள்ள 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து திருவிழாவில் லீக் சுற்று இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.
இதில் சென்னை நேரு மைதானத்தில் நேற்றிரவு நடந்த 76-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி - ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதின.
இதில், சென்னை வீரர்கள் வசம்தான் பந்து அதிக நேரம் இருந்தது. ஆனால், தடுப்பாட்டத்தை மேற்கொண்ட ஜாம்ஷெட்பூர் வீரர்கள், கோல் வாங்கிவிடக் கூடாது என்பதில் கவனமுடன் செயல்பட்டதால் சென்னை அணியின் பல முயற்சிகள் தடுக்கப்பட்டன.
32-வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் வீரர் வெலிங்டன் பிரியோரி கோல் அடித்து, இது இந்த சீசனில் அடிக்கப்பட்ட 200-வது கோல் ஆகும்.
பதிலடி கொடுக்க சென்னை வீரர்கள் தீவிரம் காட்டினர். அகஸ்டோ, செரனோ, மைல்சன் அடித்த ஷாட்டுகள் கம்பத்தை விட்டு விலகி சென்றன. 88-வது நிமிடம் வரை சென்னை அணியினரால் ஒரு பந்தை கூட துல்லியமாக இலக்கை நோக்கி அடிக்க முடியாத அளவுக்கு ஜாம்ஷெட்பூர் அணியின் தடுப்பு அரண் வலுவாக இருந்தது.
ஆனால், 89-வது நிமிடத்தில் சென்னை அணி கார்னரில் இருந்து மிஹெலிக் உதைத்த ஷாட்டை, சக வீரர் முகமது ரபி தலையால் முட்டி கோலாக்கினார். முடிவில் இந்த ஆட்டம் 1-1 என்ற கணக்கில் கோல் சமனில் முடிந்தது.
இதுவரை சென்னை அணி 16 ஆட்டங்களில் விளையாடி 8 வெற்றி, 4 டிரா, 4 தோல்வி என்று 28 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.
ஜாம்ஷெட்பூர் அணி 7 வெற்றி, 5 டிரா, 4 தோல்வியுடன் 26 புள்ளிகளை பெற்று 4-வது இடத்தில் இருக்கிறது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.