ரவி சாஸ்திரி - கோலிக்கு எதிராக வீரர்கள் போர்க்கொடி..? வெடிக்கும் சர்ச்சை

By karthikeyan VFirst Published Sep 7, 2018, 9:52 AM IST
Highlights

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் கேப்டன் கோலி ஆகியோர் மீது அணி வீரர்களே அதிருப்தியில் இருப்பது உறுதியாகியுள்ளது. 
 

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் கேப்டன் கோலி ஆகியோர் மீது அணி வீரர்களே அதிருப்தியில் இருப்பது உறுதியாகியுள்ளது. 

இந்தியா இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரை 1-3 என இந்திய அணி இழந்தது. இங்கிலாந்துக்கு எதிரான தொடரை இழந்ததன் விளைவாக தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. ரவி சாஸ்திரி பயிற்சியாளரான பிறகு, இந்தியாவிற்கு வெளியே இந்திய அணி சோபிக்கவில்லை. தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் அந்த அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்தது. தற்போது இங்கிலாந்திலும் தொடரை இழந்துள்ளது. 

போட்டிக்கு போட்டி அணியில் மேற்கொள்ளப்படும் மாற்றங்களும் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகின. ரவி சாஸ்திரி மீது கங்குலி, சேவாக் போன்ற முன்னாள் வீரர்களும் கிரிக்கெட் விமர்சகர்களும் ரசிகர்களும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். ஆனால், அதையெல்லாம் பற்றி ரவி சாஸ்திரி கவலைப்படுவதாக, விமர்சனங்களுக்கு செவிமடுப்பதாகவோ தெரியவில்லை. 

அணியில் தொடர்ந்து மாற்றங்கள் செய்யப்படுவதே வீரர்களுக்கு சளிப்பை ஏற்படுத்துகிறது. இதுவரை கோலி தலைமையில் இந்திய அணி 39 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளது. அதில், சவுத்தாம்ப்டனில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் மட்டும்தான் மூன்றாவது டெஸ்ட்டில் ஆடிய அதே அணி ஆடியது. அதற்கு முன் 38 போட்டிகளிலும் அணியில் மாற்றம் செய்யப்பட்டது. இதுவே வீரர்களுக்கு சளிப்பையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்தியது. 

இதுபோன்று அணியில் தொடர்ந்து மாற்றங்கள் செய்யக்கூடாது. வீரர்களுக்கு அவர்களுக்கான இடம் அணியில் இருக்கிறது என்ற உறுதியை கொடுத்தால்தான் அவர்களால் நம்பிக்கையுடன் ஆடமுடியும் என கங்குலி ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ளார். அதேபோல், அணியில் தொடர்ந்து மாற்றங்கள் மேற்கொள்வதை சேவாக், ஹர்பஜன் சிங் ஆகியோரும் விமர்சித்திருந்தனர். 

இந்நிலையில், இந்த விவகாரத்தில் வீரர்களே ரவி சாஸ்திரி மற்றும் கோலி மீது அதிருப்தியில் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆங்கில ஊடகம் ஒன்று இதுதொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளது. அதில், வீரர்களின் பெயர்களை குறிப்பிடாமல், அவர்கள் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:  தொடரின் ஆரம்பத்திலேயே 3 டெஸ்ட் போட்டிகளுக்கு அணியில் மாற்றமில்லை. அதனால் சிறப்பாக ஆடுங்கள் என்று கூறியிருந்தால், அது எங்களுக்கு தன்னம்பிக்கையை அளிக்கும். கோலி நல்ல மனிதர் தான். வீரர்களிடமிருந்து சிறந்த பங்களிப்பை எதிர்நோக்குகிறார். அதற்காக தொடர்ந்து அணியில் மாற்றங்களை செய்து கொண்டிருக்க வேண்டிய தேவையில்லை. அப்படி செய்வதால் ஒரு வீரருக்கு அவரது திறமை மீதே சந்தேகம் எழுகிறது. நாங்கள் எங்களது திறமை மீதே சந்தேகப்படுவது தவறுதான் என்றாலும் நாங்களும் மனிதர்கள்தானே என கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் கேப்டன் கோலியின் செயல்பாடுகள் பொதுவெளியில் விமர்சனத்துக்கு உள்ளாவதற்கு அப்பாற்பட்டு அணி வீரர்களிடையே கூட அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது உறுதியாகியுள்ளது. 
 

click me!