இலங்கைக்கு எதிரான 2 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இரட்டை சதம் அடித்து இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா உலக சாதனை படைத்துள்ளார். ஏற்கனவே ஆஸ்திரேலியா மற்றும் இலங்கையுடன் விளையாடிய ஆட்டங்களில் இரட்டை சதம் அடித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை இந்தியாவில் இழந்த நிலையில் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இப்போது ஆடி வருகிறது.
தர்மசாலாவில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இலங்கை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை கேப்டன் திசாரா பெரேரா, பந்துவீச்சைத்தேர்வு செய்தார்.
இதையடுத்து ரோகித் சர்மாவும் தவானும் களமிறங்கினர். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த தவான், 68 ரன்னில் திரிமன்னேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் ஸ்ரேயாஸ் ஐயர் ரோகித்துடன் இணைந்தார்.
இதில் 40 வது ஓவரின் முடிவில் ரோகித் சதம் அடித்தார். பின்னர், தொடர்ந்து ஆடிய அவர் 153 பந்துகளில் 13 பவுண்ரிகளும் 12 சிக்சர்களும் பறக்கவிட்டு இரட்டை சதம் அடித்தார்.
இதன்மூலம் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் மூன்றாவது இரட்டை சதத்தை பூர்த்தி செய்துள்ள ரோகித் உலக சாதனை படைத்துள்ளார்.
ஏற்கனவே ஆஸ்திரேலியா மற்றும் இலங்கையுடன் விளையாடிய ஆட்டங்களில் இரட்டை சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.