இந்திய அணியில் பாண்டியா, ராகுல் இல்லை!! பிசிசிஐ அதிரடி

By karthikeyan VFirst Published Jan 11, 2019, 5:11 PM IST
Highlights

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஹர்திக் பண்டியா மற்றும் ராகுல் ஆகிய இருவரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். 

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஹர்திக் பண்டியா மற்றும் ராகுல் ஆகிய இருவரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆடவில்லை. 

ஹர்திக் பாண்டியாவும் ராகுலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியில் இடம்பெற்றுள்ளனர். நாளை முதல் ஒருநாள் போட்டி சிட்னியில் நடக்கிறது. இதற்கிடையே தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஹர்திக் பாண்டியாவும் ராகுலும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினர். 

இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து 24 மணி நேரத்தில் விளக்கமளிக்க வேண்டும் என ஹர்திக் பாண்டியா மற்றும் ராகுல் ஆகிய இருவருக்கும் பிசிசிஐ-யின் நிர்வாகக்குழு நோட்டீஸ் அனுப்பியது. அந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து, ஹர்திக் பாண்டியா மன்னிப்பு கேட்டார். நிகழ்ச்சியின் போக்கிற்கு ஏற்றவகையில் பதிலளித்தேனே தவிர, யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல என்று விளக்கமளித்த ஹர்திக், பகிரங்கமாக மன்னிப்பும் கோரினார்.

ஆனாலும் ஹர்திக் பாண்டியாவின் விளக்கத்தில் திருப்தியடையாத பிசிசிஐ  நிர்வாகக்குழு தலைவர் வினோத் ராய், ஹர்திக் பாண்டியா மற்றும் ராகுல் ஆகிய இருவருக்கும் 2 போட்டிகளில் ஆட தடை விதிக்குமாறு பிசிசிஐ-யிடம் பரிந்துரைத்துள்ளார். இந்த தகவலை பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு நேற்று அளித்த பேட்டியில் வினோத் ராய் தெரிவித்திருந்தார். நிர்வாகக்குழு உறுப்பினர் டயானா எடுல்ஜியும் இருவருக்கும் 2 போட்டிகளில் தடை விதிக்கக் கோரியிருந்தார்.

இதுகுறித்து பிசிசிஐ விசாரித்துவருகிறது. இதற்கிடையே நாளை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி நடக்க உள்ள நிலையில், அந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா, ராகுல் ஆகிய இருவரும் ஆடவில்லை. ராகுல் இந்த சர்ச்சையில் சிக்கவில்லை என்றாலும் ஆஸ்திரேலிய தொடரில் ஆடும் லெவனில் இடம் கிடைத்திருக்காது. ஏனெனில் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மாவும் தவானும் இருப்பதால் ராகுலுக்கு எதார்த்தமாகவே ஆட வாய்ப்பு கிடைத்திருக்காது. ஆனால் ஹர்திக் பாண்டியாவிற்கு ஆட வாய்ப்பிருந்தது. ஆனால் இந்த சர்ச்சையில் சிக்கியதால் அவர் முதல் ஒருநாள் போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இருவரையும் முதல் போட்டியிலிருந்து நீக்கி பிசிசிஐ அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த செய்தியை பிடிஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. 
 

click me!