இங்கிலாந்து மகளிரணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா மகளிரணி படுதோல்வி அடைந்தது.
மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி பங்கேற்றுள்ளது. இதன் இரண்டாவது ஒரு நாள் போட்டி நாக்பூரில் நேற்று நடைபெற்றது.
டாஸ் வென்று பேட் டிங்கை தேர்வு செய்த இந்தியா அணி 37.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.
ஸ்மிருதி மந்தானா 42 ஓட்டங்கள், தீப்தி சர்மா 26 ஓட்டங்கள் குவித்தனர். ஏனைய 5 வீராங்கனைகளை ஒற்றை இலக்க ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
இங்கிலாந்து தரப்பில் டேனியல் ஹசல் 4/32, சோபி எசில்டோன் 4/14 ஆகியோர் அதிரடியாக பந்து வீசினர்.
பின்னர், 114 ரன்கள் வெற்றி இலக்குடன் தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி சார்பில் டேனியல் வயாட் 47 ஓட்டங்கள், டேமி பீமென்ட் 39 ஓட்டங்கள் குவித்தனர். இருவரும் ஆட்டமிழந்ததை அடுத்து ஆட வந்த ஹீதர் நைட் 42 பந்துகளில் 26 ஓட்டங்களை குவித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
இந்திய தரப்பில் ஏக்தா பிஷ்ட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இறுதியில் 29 ஒவர்களில் 117 ஓட்டங்களை குவித்து இங்கிலாந்து வெற்றி பெற்றது.
முதல் ஒரு நாள் ஆட்டத்தில் இந்தியா வென்றிருந்தது. இந்த வெற்றி மூலம் இங்கிலாந்து தொடரை 1-1 என சமன் செய்துள்ளது.