கடைசி ஓவரில் சிங்கிள் ஓடாதது ஏன்..? சர்ச்சை குறித்து தினேஷ் கார்த்திக் அதிரடி விளக்கம்

By karthikeyan VFirst Published Feb 14, 2019, 11:18 AM IST
Highlights

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 213 ரன்கள் என்ற கடின இலக்கை இந்திய அணி விரட்டியபோது, கடைசி ஓவரின் மூன்றாவது பந்தில் குருணல் பாண்டியா சிங்கிள் அழைத்தபோது ஓடாதது ஏன் என்று தினேஷ் கார்த்திக் விளக்கமளித்துள்ளார். 
 

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 213 ரன்கள் என்ற கடின இலக்கை இந்திய அணி விரட்டியபோது, கடைசி ஓவரின் மூன்றாவது பந்தில் குருணல் பாண்டியா சிங்கிள் அழைத்தபோது ஓடாதது ஏன் என்று தினேஷ் கார்த்திக் விளக்கமளித்துள்ளார். 

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் 213 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய இந்திய அணியின் அனைத்து வீரர்களுமே அடித்து ஆடினர். ஷிகர் தவானின் விக்கெட்டை தொடக்கத்திலேயே இழந்த நிலையில், இக்கட்டான சூழலில் அடித்து ஆட வேண்டிய சூழலில் மூன்றாம் வரிசையில் களமிறங்கிய விஜய் சங்கர், ரோஹித்துடன் பார்ட்னர்ஷிப் அமைத்து அருமையாக ஆடினார். அதன்பிறகு களத்திற்கு வந்ததுமே முதலே அடித்து ஆடிய ரிஷப் பண்ட், 12 பந்துகளில் 28 ரன்களை சேர்த்தார். 

பின்னர் ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், குருணல் பாண்டியா என அனைவருமே அதிரடியாக ஆடினர். எனினும் இந்திய அணியால் வெற்றி பெற முடியவில்லை. டி20 கிரிக்கெட்டில் தினேஷ் கார்த்திக் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இலக்கை விரட்டிய போட்டிகளில் இந்திய அணி தோற்ற ஒரே போட்டி இதுதான். 

கடைசி ஓவரில் இந்திய அணியின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. டிம் சௌதி வீசிய அந்த ஓவரின் முதல் பந்தில் 2 ரன்கள் எடுத்த தினேஷ் கார்த்திக், அடுத்த இரண்டு பந்துகளில் ரன் ஏதும் எடுக்கவில்லை. இரண்டாவது பந்தில் ரன் எடுக்க முடியவில்லை. மூன்றாவது பந்தில் குருணல் பாண்டியா ரன் ஓடுவதற்கு அழைக்க, தினேஷ் கார்த்திக் மறுத்துவிட்டார்.  அடுத்த மூன்று பந்தையும் அடித்து ஆட நினைத்த தினேஷ் கார்த்திக்கால் அது முடியவில்லை.  4வது பந்தில் ஒரு ரன் மட்டுமே அடிக்க, ஐந்தாவது பந்தில் குருணல் ஒரு ரன் அடித்தார். கடைசி பந்தில் 11 ரன்கள் தேவைப்பட்டது. அந்த பந்தை வைடாக போட்டார் சௌதி. கடைசி பந்தில் தினேஷ் கார்த்திக் சிக்ஸர் அடிக்க, இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

ஒருவேளை மூன்றாவது பந்தில் தினேஷ் கார்த்திக் சிங்கிள் ஓடியிருந்தால், ஆட்டம் வேறு மாதிரியாக மாறியிருக்க வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் குருணல் பாண்டியாவும் நன்றாகத்தான் ஆடிக்கொண்டிருந்தார். மூன்றாவது பந்தை அடித்த தினேஷ் கார்த்திக் சிங்கிள் ஓடியிருந்தால், நான்காவது பந்தில் குருணல் பெரிய ஷாட் ஆடியிருக்கலாம், ஆடாமலும் போயிருந்திருக்கலாம். ஆனால் மூன்றாவது பந்தில் குருணல் பாண்டியாவின் அழைப்பை ஏற்க மறுத்ததற்கு, போட்டி முடிந்ததும் மன்னிப்பு கேட்டார் தினேஷ் கார்த்திக். அவர் சிங்கிளை மறுத்தது ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதும் ஏற்படுத்தாமல் போவதும் இரண்டாவது விஷயம். ஆனால் அதுவும் ஒரு தவறாக இருந்திருக்குமோ என்ற உணர்வில் ஜெண்டில்மேனாக மன்னிப்பு கேட்டார் தினேஷ் கார்த்திக்.

ஆனாலும் தினேஷ் கார்த்திக் சிங்கிள் ஓடாததை சுட்டிக்காட்டி சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தாறுமாறாக விமர்சித்தனர். ரசிகர்கள் மட்டுமல்லாது முன்னாள் வீரர்கள் பலரும் தினேஷ் கார்த்திக்கின் செயல்பாட்டை விமர்சித்திருந்தனர். 

இந்நிலையில், அந்த இக்கட்டான சூழலில் முக்கியமான நேரத்தில் சிங்கிள் ஓடாதது ஏன் என்று தினேஷ் கார்த்திக் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து பேசிய தினேஷ் கார்த்திக், நெருக்கடியான சூழலில் பெரிய ஷாட்டுகளை ஆட முடியும் என ஒரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் தன்மீது நம்பிக்கை வைக்க வேண்டியது அவசியம். அந்த வகையில், என்னால் சிக்ஸர் அடிக்க முடியும் என உறுதியாக நம்பினேன். அந்த நேரத்தில் நம்முடன் களத்தில் இருக்கும் வீரர் மீதும் நம்பிக்கை வைக்க வேண்டும். ஆனால் என்னால் எதிர்முனைக்கு ஓட முடியாமல் போய்விட்டது. இதுபோன்ற சம்பவங்கள் கிரிக்கெட்டில் நடப்பது வழக்கம்தான். சில நேரங்களில் பவுண்டரிகளை அடிக்க முடியும். சில நேரங்களில் முடியாது. நெருக்கடியான சூழலில் டிம் சௌதி அபாரமாக சில யார்க்கர்களை வீசினார். அதை கண்டிப்பாக பாராட்டியே ஆக வேண்டும். அவர் சிறு தவறு செய்திருந்தாலும் நாங்கள் வீழ்த்தியிருப்போம். ஆட்டத்தின் சூழ்நிலையை அணி நிர்வாகம் உணர்ந்திருந்தது. நாங்கள் இருவருமே சிறப்பாக செயல்பட்டதை அவர்கள் அறிந்துள்ளனர். 

இதுபோன்ற இக்கட்டான சூழல்களில் ஆடுவதற்கு நான் பழகியிருக்கிறேன். பயிற்சியின் மூலம் இதுபோன்ற சூழல்களில் ஆடி வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அதே நம்பிக்கையுடன் தான் அன்றைக்கும் ஆடினேன். ஆனால் என்னால் முடியாமல் போய்விட்டது என்று தினேஷ் கார்த்திக் விளக்கமளித்துள்ளார். 
 

click me!