
நிதாஹஸ் கோப்பை இறுதி போட்டியில் யாரும் எதிர்பாராத நிலையில், அதிரடியாக ஆடி வங்கதேசத்தை வீழ்த்தி வெற்றி தேடித்தந்தார் தினேஷ் கார்த்திக். இதையடுத்து தினேஷ் கார்த்திக்கிற்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
ஆனால், இந்திய அணியை வெற்றி பெற வைப்பேன் என்பதை போட்டிக்கு முன்னதாகவே வேறு விதமாக தெரிவித்துவிட்டார்.
நிதாஹஸ் கோப்பை டி20 தொடரின் இறுதி போட்டி, கொழும்புவில் நேற்று இந்தியா-வங்கதேசம் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து திரில்லர் வெற்றியை தேடி தந்தார் தினேஷ் கார்த்திக். தோல்வியின் விளிம்பிலிருந்து இந்தியாவை தினேஷ் கார்த்திக் காப்பார் என்று யாரும் நினைத்தார்களோ? இல்லையோ.. ஆனால் தினேஷ் கார்த்திக் கண்டிப்பாக நினைத்தார் என்றே கூற வேண்டும்.
எப்படி என்று கேட்கிறீர்களா? போட்டிக்கு முந்தைய நாள் செய்தியாளர்களிடம் பேசிய தினேஷ் கார்த்திக், வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்பதை மறைமுகமாக தெரிவித்தார். அதாவது, வங்கதேச அணி உருவானதிலிருந்து சிறப்பான வளர்ச்சியை பெற்றுள்ளது. தற்போது சிறந்த அணியாக திகழ்கிறது. எனினும் வங்கதேச அணிக்கு எதிராக தோற்பதை இந்திய ரசிகர்கள் விரும்புவதில்லை. வங்கதேசத்துடனான தோற்றீர்கள்? என்ன செய்துகொண்டிருந்தீர்கள்? என்றெல்லாம் கேள்விகள் எழும். எனவே வங்கதேசத்தை வெல்ல வேண்டும் என தெரிவித்திருந்தார்.
அவர் கூறியதற்கு ஏற்ற வகையில், களத்திலும் அவ்வாறே செயல்பட்டார். வங்கதேசத்துடன் தோற்றுவிடக்கூடாது என்ற எண்ணம் அவரது ஆழ்மனதில் பதிந்து அவரை ஆட்டிப்படைத்ததோ என நினைக்கும் அளவிற்கு அவரது இறுதிக்கட்ட ஆட்டம் இருந்தது. 2 ஓவரில் 34 ரன்கள் என்ற கடினமான சூழலிலும் டென்ஷன் ஆகாமல் அதிரடியாக ஆடி அணியை வெற்றி பெற வைத்தார்.
ஆக மொத்தத்தில், வங்கதேசத்தை வீழ்த்த வேண்டும் என்பதை போட்டிக்கு முன்னரே தீர்மானித்துவிட்டு, அதன்படி தன்னம்பிக்கையுடன் ஆடி வெற்றி தேடி தந்துள்ளார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.