
ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தீபக் சாஹர், தோனி தன் மீது கொண்டிருந்த அபிப்ராயத்தை கெடுத்துக்கொண்டார்.
ஐபிஎல்லில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆடியவர் தீபக் சாஹர். சென்னை அணியில் ஆடியபோது மற்ற வேகப்பந்து வீச்சாளர்கள் சொதப்பியபோது, நன்றாக வீசி தோனியை கவர்ந்தவர் தீபக் சாஹர். தீபக் சாஹரின் மீது தோனிக்கு நல்ல அபிப்ராயம் இருந்தது.
ஐபிஎல்லில் பவுலர்களின் சொதப்பலால் தோல்வியை தழுவ நேரிட்டபோது கூட தோனி தீபக் சாஹரை பற்றி நல்லவிதமாகத்தான் கூறினார். இந்நிலையில், ஷர்துல் தாகூர் மற்றும் அக்ஸர் படேல் ஆகிய இருவரும் காயம் காரணமாக ஆசிய கோப்பை தொடரை விட்டு வெளியேறியதால் சித்தார்த் கவுல் மற்றும் தீபக் சாஹர் ஆகிய இருவருக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இதையடுத்து ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் புவனேஷ்வர் குமார், பும்ரா, சாஹல் ஆகிய மூவருக்கும் ஓய்வு அளித்துவிட்டு சாஹர், கவுல், கலீல் ஆகிய மூவரும் களமிறக்கப்பட்டனர். இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தானிஸ்தான் அணிக்கு 4வது ஓவரை வீசிய சாஹர், அந்த ஓவரில் மட்டும் 17 ரன்களை விட்டுக்கொடுத்தார். இது தோனிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
அந்த ஓவரின் நான்காவது பந்தை நோ பாலாக வீசிய சாஹர், அதன்பிறகு இரண்டு வைடுகளை வீசினார். பின்னர் சரியாக வீசப்பட்ட ஃப்ரீஹிட் பந்தில் சிக்ஸர் விளாசினார் ஆஃப்கான் வீரர் ஷேஷாத். ஐந்தாவது பந்தில் ரன் இல்லை. கடைசி பந்தில் பவுண்டரி. மொத்தம் அந்த ஓவரில் மட்டும் 17 ரன்கள். ஒன்றரை ஆண்டுகால இடைவெளிக்கு பிறகு கேப்டன் பொறுப்பை ஏற்ற தோனிக்கு, எடுத்த எடுப்பிலேயே கடுப்பை ஏற்றினார் தீபக் சாஹர். அந்த ஓவரில் மொத்தமாக 9 பந்துகளை வீசினார்.
இதனால் அதிருப்தியடைந்த தோனி, சாஹருக்கு மொத்தமாகவே 4 ஓவர்கள் மட்டுமே வழங்கினார். அந்த 4 ஓவரில் 37 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார் சாஹர்.