சென்னை அணியில் ஆட இடம் கிடைக்காததால், பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தயாராவதற்காக இங்கிலாந்து வீரர் மார்க் உட், நாடு திரும்புகிறார்.
ஐபிஎல் 11வது சீசனுக்கான ஏலத்தில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் உட்டை சென்னை அணி, 1.5 கோடி ரூபாய்க்கு எடுத்தது. மும்பை அணிக்கு எதிரான முதல் போட்டியில் மார்க் உட் களமிறக்கப்பட்டார். 4 ஓவர்கள் வீசி 49 ரன்களை விட்டுக்கொடுத்த மார்க் உட், ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தவில்லை. அதன்பிறகு மார்க் உட்டுக்கு சென்னை அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இந்நிலையில், வரும் 24ம் தேதி பாகிஸ்தான் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. சென்னை அணியில் ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்காமல் இருப்பதால், பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு தயாராக முடிவு செய்துள்ள மார்க் உட், அதற்காக இங்கிலாந்துக்கு திரும்புகிறார்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மார்க் உட், இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இடம்பெற நான் என்னை நிரூபித்தாக வேண்டும். அத்துடன் தற்போது சென்னை அணியிலும் நான் இடம்பெறவில்லை. எனவே டெஸ்ட் போட்டிக்கு தயார் செய்யும் விதமாக கவுண்டி போட்டிகளில் ஆட உள்ளேன்.
சென்னை அணியில் எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி. எனக்கு ஐபிஎல் தொப்பியை தோனி அணிவித்த தருணம் பெருமைக்குரியது. இந்த ஆண்டு திட்டமிட்டபடி எதுவும் நடக்கவில்லை என்றாலும், அந்த தொப்பியை அணிய ஆவலாக உள்ளேன். சென்னை அணியின் போட்டிகளை வீட்டில் இருந்து பார்த்து ஆதரவளிப்பேன் என மார்க் உட் தெரிவித்துள்ளார்.