
ஊக்கமருந்து பயன்படுத்தியதால் வாழ்நாள் தடை விதிக்கப்பட 43 ரஷிய வீரர்களில், 28 பேர் மீதான தடையை நீக்கி விளையாட்டுகளுக்கான நடுவர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
2014-ஆம் ஆண்டு ரஷியாவின் சோச்சி நகரில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியின்போது ரஷிய அரசு அமைப்புகளின் ஆதரவுடன் அந்நாட்டு வீரர், வீராங்கனைகள் ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதன் தொடர்ச்சியாக இம்மாதம் பியோங்சாங்கில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் அணிகள் பிரிவில் ரஷியா பங்கேற்க, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தடை விதித்தது. எனினும், 169 ரஷியர்கள் பொதுவான வீரர்களாக பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து, தடை உத்தரவுக்கு எதிராக 42 ரஷியர்கள் தரப்பில் நடுவர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டிருந்தது. இதனிடையே, மேற்கூறிய 28 பேருடன் மேலும் 11 ரஷியர்கள் மீதான வாழ்நாள் தடையையும் நீக்கி நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனினும், அவர்கள் பியோங்சாங் ஒலிம்பிக்கில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படவில்லை.
விளையாட்டுகளுக்கான நடுவர் இதுதொடர்பாக பிறப்பித்த உத்தரவில், 'சோச்சி ஒலிம்பிக்கில் ரஷிய அரசு அமைப்புகளின் ஆதரவுடன் ஊக்கமருந்து பயன்படுத்தப்பட்ட நிகழ்வுகளில், சம்பந்தப்பட்ட 28 பேர் ஆதாயம் அடைந்ததற்கான போதிய ஆதாரங்களை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி சமர்ப்பிக்கவில்லை' என்று கூறப்பட்டிருந்தது.
இதன் மூலமாக, எதிர்வரும் பியோங்சாங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் மேலும் சில ரஷிய வீரர்கள் பங்கேற்பதற்கான வாய்ப்புகள் கிடைத்துள்ளன.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.