சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர்பிரிவில் காலிறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் யூகி பாம்ப்ரி முன்னேறினார்.
சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டி சென்னையில் நடைபெற்றது. நேற்று நடைப்பெற்ற இதன் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் சக நாட்டவரான சித்தார்த் ராவத்தை போட்டித் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் யூகி பாம்ப்ரி சந்தித்தார்.
முதல் செட்டை 6-2 என்ற கணக்கில் எளிதில் கைப்பற்றிய யூகி, இரண்டாவது செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
இந்தப் போட்டியில் காலிறுதிக்கு நுழையும் ஒரே இந்தியர் இவர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று நடைபெறவுள்ள காலிறுதிச் சுற்றில் ஜப்பான் வீரர் யசுதாகா யுச்சியாமாவை அவர் எதிர்கொள்கிறார்.
நேற்று நடைபெற்ற மற்றோர் ஆட்டத்தில் போட்டித் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் ஜோடான் தாம்சன் வெற்றிப் பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். அவர், காலிறுதியில் செர்பியாவின் டி.பெட்ரோவிக்கை எதிர்கொள்கிறார்.