பெங்களூரு ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, மற்றும் சுமித் நாகல் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறினர்.
பெங்களூரு ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் பாம்ப்ரி, தனது காலிறுதிக்கு முந்தையச் சுற்றில் ஸ்பெயினின் பெட்ரோ மார்டினெஸை 6-2, 7-6 என்ற செட் கணக்கில் வென்றார்.
மற்றொரு ஆட்டத்தில் சுமித் நாகல், பிரிட்டனின் பிரைடன் கிலெய்னை 6-4, 4-6, 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் பிரஜனேஷ் கன்னேஸ்வரன் 6-2, 6-7(1), 6-1 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் மார்க் போல்மாஸை வீழ்த்தினார்.
முந்தைய சுற்றில் அவர் போட்டித் தரவரிசையில் 6-வது இடத்தில் இருந்த பிரிட்டனின் எவான் கிங்கை 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்றிருந்தார். இதன்மூலம், புணே ஓபனில் எவானிடம் கண்ட தோல்விக்கு பிரஜனேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் பிரஜனேஷ் கன்னேஸ்வரன் - ராம்குமார் ராமநாதன் இணை தனது முதல் சுற்றில் 6-2, 6-2 என்ற செட் கணக்கில் மற்றொரு இந்திய இணையான சூரஜ் பிரபோத் - நிதின் குமாரை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறியது.