தோனியை பற்றி பாகிஸ்தான் வீரர் அப்ரிடி என்ன சொன்னார் தெரியுமா?

First Published Jan 6, 2017, 12:13 PM IST
Highlights


புதுடெல்லி,

சிறந்த அணியாக இந்தியாவை வார்த்தெடுத்த எல்லா பெருமையும் டோனியையே சாரும் என்று பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் அப்ரிடி சொன்னார்.

இந்திய ஒரு நாள் போட்டி மற்றும் டி-20 அணியின் கேப்டன் பதவியை வகித்து வந்த 35 வயதான டோனி திடீரென நேற்று முன்தினம் அந்த பதவிகளில் இருந்து விலகினார்.

விக்கெட் கீப்பரான டோனி ஒரு வீரராக தொடர்ந்து நீடிப்பேன் என்று தெரிவித்து இருக்கிறார்.

டி-20 ஓவர் உலக கோப்பை, ஒரு நாள் போட்டி உலக கோப்பை, ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை, ஆசிய கோப்பை, ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக முத்தரப்பு கோப்பை என்று சகலத்தையும் வென்றுத் தந்ததுடன், மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் இந்தியாவை ‘நம்பர் ஒன்’ சிம்மாசனத்திலும் அமர்த்தியவர்.

இப்படி கேப்டனாக பல்வேறு அரிய சாதனைகளை படைத்த டோனியின் விலகல் முடிவு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

இதுகுறித்து சச்சின் தெண்டுல்கர் (இந்திய முன்னாள் வீரர்) தெரிவித்ததாவது:

“டி-20 ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டி உலக கோப்பையை இந்தியாவுக்காக வென்றுத்தந்த டோனிக்கு எனது வாழ்த்துகள். வளர்ந்து வரும் வீரராக, அதன் பிறகு ஆக்ரோஷமான வீரராக என்ற நிலையில் இருந்து உறுதிமிக்க ஒரு அணித்தலைவராக உருவெடுத்ததுவரை அவரை நான் பார்த்து வருகிறேன். அவரது வெற்றிகரமான கேப்டன்ஷிப்பை கொண்டாட வேண்டிய தினம் இது. அதே சமயம் அவரது முடிவுக்கும் நாம் மதிப்பு அளிக்க வேண்டும். களத்தில் ரசிகர்களை தொடர்ந்து உற்சாகப்படுத்தும் வகையில் விளையாட வாழ்த்துகள்.

சுனில் கவாஸ்கர் (இந்திய முன்னாள் கேப்டன்) தெரிவித்ததாவது:

“டோனி மட்டும் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் முடிவை எடுத்திருந்தால், அதை திரும்ப பெறும்படி வலியுறுத்தி அவரது வீட்டு முன்பு தர்ணா போராட்டம் நடத்தியிருப்பேன்.

ஒரு வீரராக இன்னும் எதிரணியின் பந்து வீச்சை அவரால் நொறுக்கி தள்ள முடியும். ஒரே ஓவரில் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய திறமைசாலி. அவரை போன்ற வீரர் அணிக்கு மிகவும் அவசியமாகும்.

தொடர்ந்து விளையாட அவர் முடிவு எடுத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 2019-ம் ஆண்டு உலக கோப்பை வரை விளையாடுவதா? இல்லையா? என்பது அவரது விருப்பமும் ஆட்டத்திறனை சார்ந்த விஷயமாகும்.

அப்ரிடி (பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர்) தெரிவித்ததாவது:

“சிறந்த அணியாக இந்தியாவை வார்த்தெடுத்த எல்லா பெருமையும் டோனியையே சாரும். சிறந்த அணித்தலைவரான அவர் உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் வீரர்களுக்கு உந்துசக்தி” என்று தோனியின் விலகல் குறித்து அவர்கள் தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர்.

tags
click me!