
நாட்டின் பல்வேறு மண்டலங்களில் உள்ள ஒற்றையர் பிரிவு வீரர்களுக்கு பயிற்சியளிக்கும் வகையில் 19 பேர் கொண்ட பயிற்சியாளர் குழுவை இந்திய பாட்மின்ண்டன் சங்கம் (பாய்) நியமித்துள்ளது. இந்த பயிற்சியாளர்கள் குழுவில் முன்னாள் வீரர்களான அரவிந்த் பாட், ஜுவாலா கட்டா உள்ளிட்டோர் பயிற்சியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேசிய தலைமைப் பயிற்சியாளராக பி.கோபிசந்த் உள்ள நிலையில், நாட்டின் பல்வேறு மண்டலங்களில் உள்ள ஒற்றையர் பிரிவு வீரர்களுக்கு பயிற்சியளிக்கும் வகையில் 19 பேர் கொண்ட பயிற்சியாளர் குழுவை இந்திய பாட்மின்ண்டன் சங்கம் (பாய்) நியமித்துள்ளது.
ஆடவர் இரட்டையர் வீரர்களுக்காக 12 பயிற்சியாளர்கள் குழுவும், மகளிர் இரட்டையர் வீராங்கனைகளுக்காக 4 பயிற்சியாளர்கள் கொண்ட குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.
ஆடவர் ஒற்றையருக்கான பயிற்சியாளர் குழுவில், ஜெர்மன் ஓபன் முன்னாள் சாம்பியன் அரவிந்த் பாட், 2008-ஆம் ஆண்டு ஒலிம்பிக் வீரர் அனுப் ஸ்ரீதர், 2006-ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் வென்ற சேத்தன் ஆனந்த், பார்சிலோனா மற்றும் அட்லாண்டா ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற தீபாங்கர் சாட்டர்ஜி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
மகளிர் இரட்டையர் பயிற்சியாளர்கள் குழுவில், 2011-ஆம் ஆண்டு உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்ற ஜுவாலா கட்டா, 8 முறை தேசிய சாம்பியன் மதுமிதா பிஸ்த் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
ஆடவர் ஒற்றையர் ஜூனியர் வீரர்களுக்கு தேசிய பயிற்சியாளர் சஞ்சய் மிஸ்ரா உள்ளிட்ட 21 பயிற்சியாளர்கள் கொண்ட குழுவும், மகளிர் ஒற்றையர் ஜூனியர் வீராங்கனைகளுக்கு சீனியர் தேசிய சாம்பியனான சயாலி கோகலே உள்ளிட்ட 10 பயிற்சியாளர்கள் கொண்ட குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, இந்திய பாட்மிண்டன் சங்க செயலர் அனுப் நரங் கூறியது:
“பயிற்சியாளர்கள் மற்றும் முன்னாள் வீரர், வீராங்கனைகள் தங்களது மண்டலங்களில் உள்ள பாட்மிண்டன் வீரர், வீராங்கனைகளை பயிற்றுவிக்கும் முயற்சியாகவே இந்த பயிற்சியாளர் குழு நியமிக்கப்பட்டுள்ளது
இதுதொடர்பான கூட்டம் மே மாதம் நடைபெற்றபோது, இந்த முயற்சியில் இணைவதற்கு பயிற்சியாளர்கள் மற்றும் முன்னாள் வீரர்/வீராங்கனைகள் பெரிதும் ஆர்வம் காட்டினர்.
இந்தப் பயிற்சியாளர் குழுக் கூட்டம் ஆண்டுக்கு இருமுறை நடைபெறும். இந்தப் பயிற்சியின் மூலம் சிறப்பான திறனை வெளிப்படுத்தும் வீரர், வீராங்கனைகள் தேசிய அணியில் இடம் பெற வாய்ப்பளிக்கப்படும்” என்று அனுப் நரங் கூறினார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.