டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் சதத்தையே முச்சதமாக மாற்றிய 3 வீரர்கள்..! 4வது இடத்தை தவறவிட்ட க்ராவ்லி

By karthikeyan VFirst Published Aug 22, 2020, 10:21 PM IST
Highlights

டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் சதத்தை முச்சதமாக மாற்றிய அரிதினும் அரிதான வீரர்கள் பட்டியலில் இடம்பெறும் வாய்ப்பை இங்கிலாந்து இளம் வீரர் ஜாக் க்ராவ்லி தவறவிட்டார்.
 

பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி சவுத்தாம்ப்டனில் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. இங்கிலாந்து அணி 127 ரன்களுக்கே ரோரி பர்ன்ஸ், சிப்ளி, ரூட், ஓலி போப் ஆகிய 4 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், இளம் வீரர் ஜாக் க்ராவ்லியும் ஜோஸ் பட்லரும் இணைந்து 5வது விக்கெட்டுக்கு 359 ரன்களை குவித்தனர்.

களமிறங்கியது முதலே பாகிஸ்தான் பவுலர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி அடித்து ஆடிய ஜாக் க்ராவ்லி, டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். முதல் சதத்தையே இரட்டை சதமாகவும் மாற்றிய க்ராவ்லி, முச்சத்தை நோக்கி வேகமாக ஆடினார். ஆனால் 267 ரன்களில் க்ராவ்லி ஆட்டமிழந்தார். க்ராவ்லி 393 பந்துகளில் 34 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 267 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் சதத்தை முச்சதமாக மாற்ற கிடைத்த வாய்ப்பை க்ராவ்லி தவறவிட்டார். 

இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் சதத்தை முச்சதமாக மாற்றிய வீரர்கள் மூன்றே பேர் தான். வெஸ்ட் இண்டீஸின் முன்னாள் லெஜண்ட் வீரர் கேரி சோபர்ஸ், ஆஸ்திரேலியாவின் பாப் சிம்ப்சன் மற்றும் இந்தியாவின் கருண் நாயர்.

1. கேரி சோபர்ஸ்(வெஸ்ட் இண்டீஸ்)

1958ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதல் சதமடித்த கேரி சோபர்ஸ், அந்த சதத்தை முச்சதமாக மாற்றி 365 ரன்களை குவித்தார். 

 

2. பாபி சிம்ப்சன்(ஆஸ்திரேலியா)

1964 ஆஷஸ் தொடரின் ஒரு போட்டியில் முதல் சதமடித்த பாபி சிம்ப்சன், அதை முச்சதமாக மாற்றி 311 ரன்களை குவித்தார்.

3. கருண் நாயர்(இந்தியா)

2016ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தை பதிவு செய்த கருண் நாயர், அதை முச்சதமாக மாற்றி 303   ரன்களை குவித்தார்.

இந்த வரிசையில் நான்காவது வீரராக இடம்பெறும் வாய்ப்பை 22 வயதே ஆன இங்கிலாந்தின் இளம் வீரர் ஜாக் க்ராவ்லி தவறவிட்டார்.
 

click me!