இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர்.. முன்னாள் வீரரின் அதிரடியான கருத்து

By karthikeyan VFirst Published Aug 13, 2019, 12:18 PM IST
Highlights

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் குறித்து முன்னாள் ஃபாஸ்ட் பவுலர் ஜாகீர் கான் கருத்து தெரிவித்துள்ளார். 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி டி.எல்.எஸ் முறைப்படி 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்திய அணியின் மிடில் ஆர்டர் சிக்கலுக்கு தீர்வு காணும் விதமாக ஷ்ரேயாஸ் ஐயர், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மீண்டும் அணியில் இடம்பிடித்தார். இந்திய அணியின் நான்காம் வரிசை சிக்கலுக்கு தீர்வு காணும் விதமாக ஷ்ரேயாஸ் ஐயர் அணியில் எடுக்கப்பட்டுள்ளார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போட்டிக்கு முன்னதாகவே ரிஷப் பண்ட் தான் நான்காம் வரிசையில் ஆடுவார் என்றும், 4 மற்றும் 5ம் பேட்டிங் வரிசைகள் நிரந்தரமானது அல்ல; சூழலுக்கு ஏற்றவாறு வீரர்கள் களமிறக்கப்படுவார்கள் என கேப்டன் கோலி தெரிவித்தார். 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின், இரண்டாவது விக்கெட்டாக 16வது ஓவரில் ரோஹித் அவுட்டானார். எனவே இன்னும் 35 ஓவர்கள் எஞ்சியிருந்த நிலையில், அந்த நேரத்தில் பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டியது அவசியம். அப்படியான சூழலில், கோலி சொன்ன மாதிரி சூழலை கருத்தில் கொண்டு இறக்க வேண்டுமென்றால், ஷ்ரேயாஸ் ஐயரைத்தான் இறக்கியிருக்க வேண்டும். ஏனெனில் ரிஷப் பண்ட், அந்த மாதிரியான சூழலுக்கு ஏற்ப ஆடுவதற்கு இன்னும் பழகவும் இல்லை, அந்தளவிற்கு முதிர்ச்சியும் அடையவில்லை. 

அவரது இயல்பான ஆட்டம் என்பது அடித்து ஆடுவதுதானே தவிர, சூழலை உணர்ந்து அதற்கேற்ப ஆடும் பக்குவம் இல்லை. எனவே 4ம் வரிசையில் ஐயரை இறக்கியிருக்கலாம். ரிஷப் பண்ட் 34 பந்துகள் ஆடி வெறும் 20 ரன்கள் மட்டுமே அடித்து ஆட்டமிழந்தார். ஆனால் ஷ்ரேயாஸ் ஐயர், கோலியுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து அபாரமாக ஆடினார். 

இந்திய அணியின் மிடில் ஆர்டருக்கு தற்போதைய சூழலில் என்ன தேவையோ, அணி நிர்வாகம் எதை எதிர்நோக்கியிருந்ததோ அந்த பணியை செவ்வனே செய்தார் ஷ்ரேயாஸ் ஐயர். கோலியுடன் இணைந்து நான்காவது விக்கெட்டுக்கு 125 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். 68 பந்துகளில் 71 ரன்களை அடித்து அசத்தினார். 

ஆனால் ரிஷப் பண்ட்டை நான்காம் வரிசையில் இறக்கியதால், 16வது ஓவரிலேயே களத்திற்கு வந்த ரிஷப் பண்ட், தனது இயல்பான ஆட்டத்தை ஆடுவதா அல்லது அணியின் சூழலை கருத்தில்கொண்டு பார்ட்னர்ஷிப் அமைப்பதா என்ற சந்தேகத்திலேயே அந்த இன்னிங்ஸை ஆடினார். சூழலுக்கு ஏற்பவும் ஆடமுடியாமல், தனது இயல்பான இன்னிங்ஸையும் ஆடமுடியாமல் 20 ரன்களில் வெளியேறினார் ரிஷப் பண்ட். 

டாப் 3 வீரர்கள் 40-45 ஓவர்கள் வரை ஆடினால், நான்காம் வரிசையில் ரிஷப்பை இறக்கலாம். இல்லையெனில் ஷ்ரேயாஸ் ஐயரைத்தான் நான்காம் வரிசையில் இறக்க வேண்டும் என கவாஸ்கர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஜாகீர் கானும் பேட்டிங் ஆர்டர் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய ஜாகீர் கான், மிடில் ஆர்டரில் சூழலுக்கு ஏற்ப வீரர்கள் களமிறக்கப்படுவார்கள் என கோலி தெரிவித்துள்ளார். வெவ்வேறு பேட்டிங் ஆர்டரில் நன்றாக ஆடும் வீரர்கள், கடந்த 2 ஆண்டுகளாகவே பேட்டிங் வரிசையில் ப்ரமோட் செய்யப்பட்டிருக்கிறார்கள். எனவே கண்டிப்பாக ஷ்ரேயாஸ் ஐயர் நான்காம் வரிசைக்கு ப்ரமோட் செய்யப்படுவார். அப்படி அவர் நான்காம் வரிசையில் ஆடுவது, ரிஷப்புக்கு அவரது இயல்பான ஆட்டத்தை ஆட வழிவகை செய்யும் என்று ஜாகீர் கான் தெரிவித்துள்ளார். 

click me!