என் கெரியரில் என்னை கதறவிட்டது அந்த ஸ்பின்னர்தான்.. அடுத்தது மெக்ராத்.. யுவராஜ் சிங் ஓபன்டாக்

By karthikeyan VFirst Published Apr 1, 2020, 9:40 PM IST
Highlights

இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங், தனது கெரியரில் தான் எதிர்கொண்ட பவுலர்களிலேயே யாருடைய பவுலிங் அவருக்கு மிகவும் சவாலாக இருந்தது என்பதை தெரிவித்துள்ளார்.
 

இந்திய அணியில் 2000ம் ஆண்டு கங்குலியின் கேப்டன்சியில் அறிமுகமாகி, அதன்பின்னர் ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே, தோனி, கோலி ஆகியோரின் கேப்டன்சியில்  ஆடியிருக்கிறார் யுவராஜ் சிங். 2017ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக ஆடிய யுவராஜ் சிங், இந்திய அணியின் நட்சத்திர வீரராக ஜொலித்து, பல வெற்றிகளை குவித்து கொடுத்தவர்.

தோனி தலைமையில் இந்திய அணி 2007ல் வென்ற டி20 உலக கோப்பை தொடர் மற்றும் 2011ல் வென்ற ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை  ஆகிய இரண்டிலுமே யுவராஜ் சிங்கின் பங்களிப்பு அளப்பரியது. 2011 உலக கோப்பையின் தொடர் நாயகனே யுவராஜ் சிங் தான். இந்திய அணிக்காக 17 ஆண்டுகள் பல கேப்டன்களின் கீழ் ஆடிய யுவராஜ் சிங் கடந்த 2017ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபிக்கு பின் இந்திய அணியில் ஆடவில்லை. இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன் ஓய்வு அறிவித்தார்.

2007 டி20 உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசியதுடன் 12 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என்பதால் தனிப்பட்ட சாதனைகளை பெரிதாக படைக்கவில்லை என்றாலும், தனது சிறப்பான இன்னிங்ஸ்களின் மூலம் அணிக்கு பல வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளார். சிறந்த பேட்ஸ்மேன், நல்ல பவுலர் மட்டுமல்லாது அபாரமான ஃபீல்டர் யுவராஜ் சிங். யுவராஜ் சிங் இந்திய அணியிலிருந்து 2017ம் ஆண்டு ஓரங்கட்டப்பட்ட பின்னர், அவரது இடத்தை நிரப்ப இந்திய அணிக்கு 2 ஆண்டுகள் தேவைப்பட்டது. அந்தளவிற்கு தன்னிகரில்லா தரமான வீரர் யுவராஜ்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், ஸ்போர்ட்ஸ்டாருக்கு அளித்த பேட்டியில் தனது கெரியரில் யாருடைய பவுலிங்கை எதிர்கொள்ள திணறினார் என்ற கேள்விக்கு யுவராஜ் பதிலளித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த யுவராஜ் சிங்,  முத்தையா முரளிதரனின் பவுலிங்கில்தான் நான் அதிகமாக திணறியிருக்கிறேன். அவரது பவுலிங்கை எப்படி எதிர்கொள்வது என்ற ஐடியாவே எனக்கு இருந்ததில்லை. அதேபோல் அடுத்தது க்ளென் மெக்ராத். அவரது அவுட் ஸ்விங்கை என்னால் ஆடமுடியாது. ஆனால் நல்லவேளையாக மெக்ராத்தின் பவுலிங்கை நான் அதிகம் எதிர்கொண்டதில்லை. நான் டெஸ்ட் போட்டிகளில் அதிகமாக ஆடியதில்லை என்பதால் மெக்ராத்தின் பவுலிங்கை நான் அதிகமாக எதிர்கொண்டதில்லை. 

ஆனால் முரளிதரனின் பவுலிங்கை எதிர்கொள்ள சச்சின் எனக்கு ஒருமுறை ஒரு அறிவுரை கூறினார். அதாவது முரளிதரனின் பவுலிங்கை ஸ்வீப் ஷாட் ஆட அறிவுறுத்தினார். சச்சினின் அந்த ஆலோசனை எனக்கு உதவிகரமாக இருந்தது என்று யுவராஜ் சிங் தெரிவித்தார்.
 

click me!