விராட் கோலி - பாபர் அசாம் ஒப்பீடு..! மிகவும் நேர்மையாக தனது கருத்தை நெற்றிப்பொட்டில் அடித்ததுபோல கூறிய யூனிஸ்

By karthikeyan VFirst Published May 17, 2020, 11:09 PM IST
Highlights

விராட் கோலியுடன் பாபர் அசாமை ஒப்பிடுவது அபத்தம் என்று யூனிஸ் கான் தெரிவித்துள்ளார்.
 

சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக விராட் கோலி திகழ்கிறார். சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவரும் விராட் கோலி, பேட்டிங்கில் பல சாதனைகளை முறியடித்து புதிய மைல்கற்களை செட் செய்துவருகிறார். இதுவரை 70 சர்வதேச சதங்களை விளாசியுள்ள விராட் கோலி, சச்சின் டெண்டுல்கரின் அதிக சதங்கள் மற்றும் அதிக ரன்கள் ஆகிய சாதனைகளை முறியடித்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.   

டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து விதமான போட்டிகளிலும் அசத்தலாக ஆடி தனது அபாரமான பேட்டிங்கால் சர்வதேச அளவில் பல பெரிய பெரிய ஜாம்பவான்களின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார் விராட் கோலி. 

விராட் கோலியை போலவே திறமையின் அடிப்படையில் பாபர் அசாமும் சிறந்த பேட்ஸ்மேன் தான். எதிர்காலத்தில் விராட் கோலியை போலவே பாபர் அசாமும் எதிர்காலத்தில் சிறந்த பேட்ஸ்மேனாக ஒரு ரவுண்டுவருவார் என பல முன்னாள் ஜாம்பவான்கள் நம்புகின்றனர். பாபர் அசாமை புகழ்ந்தும் வருகின்றனர். 

பாபர் அசாம் சிறந்த பேட்ஸ்மேன் தான் என்றாலும், அவரை இப்போதே விராட் கோலியுடன் ஒப்பிட முடியாது. ஏனெனில் அவர் இப்போதுதான் அவரது கெரியரின் தொடக்கத்தில் இருக்கிறார். ஆனால் விராட் கோலியோ சர்வதேச கிரிக்கெட்டில் 70 சதங்கள் மற்றும் 20 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்துவிட்டார். அதுமட்டுமல்லாமல் விராட் கோலி 10 ஆண்டுகளாக தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இந்திய அணிக்காக வெற்றிகளை குவித்து கொடுத்துவருகிறார். 

அதேபோலவே பாபர் அசாமும் பல ஆண்டுகள் தொடர்ச்சியாக சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். திறமையான பேட்ஸ்மேன்கள் பலர், தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதில்லை. எனவே பாபர் அசாம் இப்போது ஆடுவதை போலவே, இன்னும் 6 ஆண்டுகளுக்கு இடைவிடாது சிறப்பாக ஆடினால் தான் அவரை கோலியுடன் ஒப்பிட முடியும். 

ஆனால் பலர் அதற்குள்ளாக பாபர் அசாமை விராட் கோலியுடன் ஒப்பிடுவது மட்டுமல்லாமல், விராட் கோலியைவிட பாபர் அசாம் சிறந்த பேட்ஸ்மேன் என்ற கூற்றும் இப்போது உலாவருகிறது. 

இந்நிலையில், விராட் கோலியுடன் பாபர் அசாமை ஒப்பிடுவது அபத்தம் என்று பாகிஸ்தானின் முன்னாள் ஜாம்பவான் யூனிஸ் கான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள யூனிஸ் கான், விராட் கோலி 31 வயதாகிறது. கடந்த 10 ஆண்டுகளாக அவரது கெரியரின் உச்சத்தில் இருக்கிறார் கோலி. உலகம் முழுதும் அனைத்து கண்டிஷன்களிலும் தனது திறமையை நிரூபித்துள்ளார். 70 சர்வதேச சதங்களை விளாசியுள்ளார். 

பாபர் அசாமோ 5 ஆண்டுகளுக்கு முன்புதான் அறிமுகமானார். 16 சதங்கள் தான் அடித்துள்ளார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக ஆடி நல்ல சராசரி வைத்துள்ளார். ஆனாலும் விராட் கோலியுடன் இப்போதே பாபர் அசாமை ஒப்பிடுவது அபத்தம். பாபர் அசாம் இதேபோலவே இன்னும் 5 ஆண்டுகள் ஆடினால்தான் கோலியுடன் ஒப்பிடமுடியும் என்று யூனிஸ் கான் தெரிவித்துள்ளார்.
 

click me!