2023 ஒருநாள் உலக கோப்பைக்கு அணி தேர்வு செய்வது ரொம்ப கஷ்டம்.! பாவம் தேர்வாளர்கள் - விவிஎஸ் லக்‌ஷ்மண்

By karthikeyan VFirst Published Oct 7, 2022, 7:12 PM IST
Highlights

2023ம் ஆண்டு இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலக கோப்பைக்கு இந்திய அணியில் சரியான வீரர்களை தேர்வு செய்வது மிகக்கடினம் என்று விவிஎஸ் லக்‌ஷ்மண் தெரிவித்துள்ளார்.
 

இந்திய கிரிக்கெட் மிதமிஞ்சிய சிறப்பான வீரர்களை பெற்றிருக்கிறது. ஒரே சமயத்தில் 2 வெவ்வேறு சர்வதேச போட்டிகளில் ஆடும் அளவிற்கு சர்வதேச அளவிலான தரமான வீரர்களை அதிகமாக பெற்றிருக்கிறது.

ஏற்கனவே இந்திய அணி, ஒரே சமயத்தில் 2 வெவ்வேறு போட்டிகளில் ஆடியிருக்கிறது. இப்போது கூட, ரோஹித் சர்மா தலைமையில் கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட், புவனேஷ்வர் குமார், ரவிச்சந்திரன் அஷ்வின், சாஹல் ஆகிய முன்னணி வீரர்களை கொண்ட இந்திய அணி டி20 உலக கோப்பையில் ஆடுவதற்காக ஆஸ்திரேலியாவிற்கு சென்றுள்ளது.

பும்ரா, ஜடேஜா, ஷமி ஆகிய சீனியர் வீரர்கள் ஃபிட்னெஸ் இல்லாமல் இருக்கின்றனர். இந்நிலையில், ஷிகர் தவான் தலைமையில் முழுக்க முழுக்க இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடிவருகிறது.

இதையும் படிங்க - பும்ராவுக்கு நிகரான மற்றும் மிகச்சரியான மாற்று வீரர் அவர் மட்டும்தான்..! டேல் ஸ்டெய்ன் தரமான ஆலோசனை

ஷிகர் தவான், ஷுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன் ஆகிய பேட்ஸ்மேன்கள், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், சிராஜ், ஆவேஷ் கான், ஷர்துல் தாகூர் ஆகிய 11 வீரர்களுடன் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆடியது இந்திய அணி. ராகுல் திரிபாதி, உம்ரான் மாலிக், ஷபாஸ் அகமது ஆகிய சிறந்த வீரர்களுக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை. அந்தளவிற்கு, சர்வதேச கிரிக்கெட்டில் ஆடுமளவிற்கான ஏகப்பட்ட திறமையான வீரர்களை கொண்ட அணியாக திகழ்கிறது இந்திய அணி.

சீனியர் வீரர்கள் ஆடாத போட்டிகளில் ஆட கிடைக்கும் வாய்ப்புகளை இளம் வீரர்கள் மிகச்சிறப்பாக பயன்படுத்தி கொள்கின்றனர். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 40 ஓவரில் 250 ரன்கள் என்ற சவாலான இலக்கை இந்திய அணி விரட்டியபோது, ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய இருவரும் அபாரமாக பேட்டிங் ஆடினர். 37 பந்தில் 50 ரன்கள் அடித்தார் ஷ்ரேயாஸ் ஐயர். அவரது சிறப்பான பேட்டிங் நீர்த்துப்போகும் அளவிற்கு ஒரு அபாரமான இன்னிங்ஸை ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் சஞ்சு சாம்சன். 63 பந்தில் 86 ரன்களை குவித்தார் சாம்சன்.

அடுத்த ஆண்டு ஒருநாள் உலக கோப்பை இந்தியாவில் நடக்கவுள்ள நிலையில், ஏகப்பட்ட திறமையானவீரர்கள் அணியில் இடம்பெற போட்டி போடுவதால், அந்த உலக கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்வது மிகக்கடினம் என்று தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவரும், இந்திய அணியின் தற்காலிக பயிற்சியாளருமான விவிஎஸ் லக்‌ஷ்மண் கருத்து கூறியுள்ளார்.

இதுகுறித்து பேசிய விவிஎஸ் லக்‌ஷ்மண், ஏகப்பட்ட திறமையான வீரர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு இடையேயான போட்டி பார்க்க ஆரோக்கியமாக இருக்கிறது. அடுத்த ஆண்டு(2023) இந்தியாவில் நடக்கும் ஒருநாள் உலக கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்வது தேர்வாளர்களுக்கு கடினமான விஷயமாக இருக்கும். 

இதையும் படிங்க - AUS vs WI: 2வது டி20யிலும் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலியா

சீனியர் வீரர்கள் அணிக்கு திரும்பிவிட்டால் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்காதது என்ற எதார்த்தத்தை உணர்ந்து அனைத்து இளம் வீரர்களுமே தங்களுக்கு கிடைக்கும் குறைவான வாய்ப்புகளை அருமையாக பயன்படுத்தி சிறப்பாக ஆடுகின்றனர். எனவே ஒருநாள் உலக கோப்பைக்கான அணி தேர்வு மிகக்கடினமாக இருக்கும் என்று விவிஎஸ் லக்‌ஷ்மண் தெரிவித்துள்ளார்.
 

click me!