வெளிப்படைத்தன்மையே இல்ல.. கங்குலியின் பேச்சு எனக்கு வியப்பா இருக்கு! கோலியின் சிறுவயது கோச் கொந்தளிப்பு

By karthikeyan VFirst Published Dec 11, 2021, 7:36 PM IST
Highlights

விராட் கோலி இந்திய ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து அவரது சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் ஷர்மா அதிருப்தி தெரிவித்துள்ளார்.
 

2017ம் ஆண்டிலிருந்து இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டனாக இருந்துவந்தார் விராட் கோலி. 2017ம் ஆண்டு தோனி கேப்டன்சியிலிருந்து விலகியதையடுத்து அதிலிருந்து இந்திய வெள்ளைப்பந்து அணிகளின் கேப்டன்சியையும் ஏற்றார் கோலி. டெஸ்ட் அணியின் கேப்டன்சியை 2014ம் ஆண்டே ஏற்றார் கோலி.

4 ஆண்டுகளாக இந்திய அணியை சிறப்பாகவே வழிநடத்திவந்தார் விராட் கோலி. ஆனால் அவரது கேப்டன்சியில் இந்திய அணி ஒரு ஐசிசி டிராபியை கூட ஜெயிக்கவில்லை என்பதுதான் பெரும் விமர்சனமாக இருந்துவந்தது. ஆனாலும் கோலியின் கேப்டன்சியில் இந்திய அணி அதிகமான வெற்றிகளை குவித்தது. 

ஐசிசி டிராபியை ஜெயிக்கவில்லை என்பது காலப்போக்கில் அவருக்கே பெரும் அழுத்தமாக மாறியது. ஐபிஎல்லிலும் அவரது தலைமையில் ஆர்சிபி அணி கோப்பை ஜெயிக்கவில்லை. எல்லாம் சேர்ந்து பெரும் அழுத்தமாக மாற, அவரது பேட்டிங் ஃபார்மும் கடந்த 2 ஆண்டுகளாக பெரியளவில் இல்லை. அவர் சதமடித்தே 2 ஆண்டுகல் ஆகிவிட்டன.

இந்நிலையில், தனது பணிச்சுமையை குறைத்துக்கொண்டு பேட்டிங்கில் கவனம் செலுத்தும் விதமாக, டி20 உலக கோப்பையுடன் டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகுவதாக அந்த தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே அதிரடியாக அறிவித்தார். அவரது தலைமையில் டி20 கிரிக்கெட்டில் கடைசியாக ஆடிய டி20 உலக கோப்பை தொடரிலும் இந்திய அணி சரியாக செயல்படவில்லை. சூப்பர் 12 சுற்றுடனேயே வெளியேறியது. 

இதையடுத்து டி20  அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார். ரோஹித்தின் தலைமையில் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை வென்றது இந்திய அணி. டி20 அணியின் கேப்டனாக ரோஹித் நியமிக்கப்பட்டபோதே, ஒருநாள் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்படுவார் என்ற தகவல் வெளிவந்துவிட்டது. அந்தவகையில் கடந்த 8ம் தேதி ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்டு ரோஹித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

விராட் கோலியின் தலைமையில் இந்திய அணி 95 ஒருநாள் போட்டிகளில் ஆடி 65 வெற்றிகளை பெற்றுள்ளது. இந்நிலையில், கோலி கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி விளக்கமளித்தார். அப்போது பேசிய கங்குலி, இதுகுறித்து பேசிய பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி, டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து விலகவேண்டாம் என்று விராட் கோலியை பிசிசிஐ சார்பில் கேட்டுக்கொண்டோம். கேப்டனை மாற்றும் ஐடியாவே கிடையாது. ஆனால் விராட் டி20 கேப்டன்சியிலிருந்து விலகினார். டி20 அணியை ஒரு கேப்டனும், ஒருநாள் அணிக்கு ஒரு கேப்டனும் வழிநடத்துவதை தேர்வாளர்கள் விரும்பவில்லை. எனவே தான் ஒருநாள் அணியின் கேப்டன்சியையும் ரோஹித்திடமே கொடுத்தனர் என்று கங்குலி தெரிவித்தார்.

இந்நிலையில், விராட் கோலி கேப்டன்சியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து அவரது சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் ஷர்மா அதிருப்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ராஜ்குமார் ஷர்மா, விராட் கோலியிடம் நான் பேசவில்லை. அவரது மொபைல் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. அவர் டி20 அணியின் கேப்டன்சியிலிருந்து மட்டுமே விலகினார். இதையடுத்து நேரடியாக அவரிடம் ஒருநாள் அணியின் கேப்டன்சியிலிருந்து விலகுமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கலாம். இதுதான் நடந்திருக்கும். கங்குலியின் ஸ்டேட்மெண்ட்டை நான் படித்தேன். டி20 கேப்டன்சியிலிருந்து விலகவேண்டாம் என்று அவரை பிசிசிஐ வலியுறுத்தியதாக கங்குலி கூறியிருக்கிறார். ஆனால் அப்படியொரு சம்பவம் நடந்ததாக நான் கேள்விப்படவில்லை. இதுதொடர்பாக பல தகவல்கள் வலம்வந்து கொண்டிருக்கின்றன. 

விராட் கோலியை கேப்டன்சியிலிருந்து நீக்கியதற்கான காரணத்தை தேர்வாளர்கள் தெளிவுபடுத்தவில்லை. இந்த விஷயத்தில் தெளிவும், வெளிப்படைத்தன்மையும் இல்லை என்றார் ராஜ்குமார் ஷர்மா.

click me!