பந்து பேட்டுலயே படல.. அம்பயரும் அவுட் கொடுக்கல!! பின்ன நீயா ஏன்ப்பா போற..? விராட் கோலியின் அதிகப்பிரசங்கித்தனம்

By karthikeyan VFirst Published Jun 17, 2019, 10:49 AM IST
Highlights

இந்த போட்டியில் இந்திய அணி 350 ரன்களை கடந்திருக்கலாம். ஆனால் மிரட்டலாக ஆடி, நான்காவது இரட்டை சதத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த ரோஹித் சர்மா, 140 ரன்களில் 39வது ஓவரில் ஆட்டமிழந்தார். டெத் ஓவர்களை தெறிக்கவிடுவதில் வல்லவர்களான ஹர்திக்கும் தோனியும் கூட ஏமாற்றினர். 
 

உலக கோப்பை தொடரின் நேற்றைய போட்டியில் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடந்தது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்கள் வழக்கம்போல சிறப்பாக ஆடினர். டாப் 3-ல் ஒருவர் சிறப்பாக ஆடினாலே இந்திய அணி வெற்றி பெற்றுவிடும். இந்த போட்டியில் டாப் ஆர்டர் மூன்று பேருமே சிறப்பாக ஆடினர். ரோஹித் சர்மாவின் அதிரடி சதம், ராகுல் மற்றும் கோலியின் பொறுப்பான அரைசதம் ஆகியவற்றால் 336 ரன்களை குவித்த இந்திய அணி, பாகிஸ்தான் அணியை 212 ரன்களுக்கு சுருட்டி டி.எல்.எஸ் முறைப்படி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் இந்திய அணி 350 ரன்களை கடந்திருக்கலாம். ஆனால் மிரட்டலாக ஆடி, நான்காவது இரட்டை சதத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த ரோஹித் சர்மா, 140 ரன்களில் 39வது ஓவரில் ஆட்டமிழந்தார். டெத் ஓவர்களை தெறிக்கவிடுவதில் வல்லவர்களான ஹர்திக்கும் தோனியும் கூட ஏமாற்றினர். 

இவையனைத்தையும் விட, கேப்டன் கோலியின் அவசரம் மற்றும் அதிகப்பிரசங்கித்தனமும் ஒரு காரணம். ரோஹித், ஹர்திக் ஆகியோர் ஆகியோர் ஆட்டமிழந்தபிறகு டெத் ஓவர்களில் அடித்து ஆடி ரன்களை உயர்த்த வேண்டிய பொறுப்பு கேப்டன் கோலியிடம் சென்றது. ஏனெனில் அவர் ஒருவர் தான் அந்த நிலையில் நன்கு களத்தில் செட்டில் ஆன பேட்ஸ்மேன். 

கோலியும் விஜய் சங்கரும் களத்தில் நின்றபோது 47வது ஓவரில் மழை குறுக்கிட்டது. அதனால் அரைமணிநேரத்திற்கும் மேலாக ஆட்டம் தடைபட்டது. பின்னர் மீண்டும் களத்திற்கு வந்ததும் முகமது அமீர் வீசிய 48வது ஓவரின் 4வது பந்தில் அவுட்டே இல்லாத ஒன்றுக்கு கோலி அவசரப்பட்டு வெளியேறினார். அமீர் வீசிய பவுன்ஸர் கோலியின் பேட்டை கடந்துசெல்லும் போது ஒரு சிறிய சத்தம் கேட்டது. அமீர் அம்பயரிடம் அப்பீல் செய்ய, அம்பயரோ அவுட் கொடுக்கவில்லை. ஆனால் இதற்கிடையே நேர்மையாக நடந்துகொள்வதாக நினைத்து கோலி களத்திலிருந்து வெளியேறினார். ஆனால் ரிப்ளேயில் பந்து பேட்டில் படாதது தெரியவந்தது. 

பந்து பேட்டில் படவேயில்லை. அம்பயரும் அவுட் கொடுக்கவில்லை. ஆனால் கோலி ஸ்போர்ட்ஸ்மேன் ஸ்பிரிட்டை காட்டுவதாகவும் நேர்மையாகவும் நடந்துகொள்வதாக நினைத்து நடையை கட்டிவிட்டார். 77 ரன்களில் கோலி வெளியேறினார். கோலி வெளியேறிய பிறகு இன்னும் 2 ஓவர்கள் எஞ்சியிருந்தன. அவர் நின்றிருந்தால் ஸ்கோரையும் இன்னும் கொஞ்சம் உயர்த்தியிருக்கலாம். அவரும் சதமடிக்கும் வாய்ப்பு இருந்தது. ஆனால் அதிகப்பிரசங்கித்தனத்தால் வெளியேறினார்.
 

click me!