கோலி, ராகுல் அதிரடி அரைசதம்.. சூர்யகுமார் சிறப்பான கேமியோ! வங்கதேசத்திற்கு கடின இலக்கை நிர்ணயித்த இந்தியா

By karthikeyan VFirst Published Nov 2, 2022, 3:27 PM IST
Highlights

டி20 உலக கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் விராட் கோலி மற்றும் கேஎல் ராகுலின் அதிரடி அரைசதத்தால் 20 ஓவரில் 184 ரன்களை குவித்த இந்திய அணி, 185 ரன்கள் என்ற கடின இலக்கை வங்கதேசத்துக்கு நிர்ணயித்துள்ளது.
 

டி20 உலக கோப்பை தொடர் சுவாரஸ்யமான கட்டத்தில் உள்ளது. க்ரூப் 1ல் நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகளுக்கு இடையே அரையிறுதிக்கு முன்னேற கடும் போட்டி நிலவுகிறது.

க்ரூப் 2ல் இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் சிறப்பாக விளையாடி வெற்றிகளை பெற்றாலும், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானுக்கும் இன்னும் பின்புற வாய்ப்புள்ளது. எனவே கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இன்று வங்கதேசத்துக்கு எதிராக ஆடிவருகிறது. வங்கதேசத்துக்கும் வெற்றி முக்கியம்.

டி20 உலக கோப்பையில் வரலாற்று சாதனை படைத்த விராட் கோலி..! முதலிடத்தில் கோலி.. வெறித்தனமா விரட்டும் ரோஹித்

அடிலெய்டில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியில் தீபக் ஹூடா நீக்கப்பட்டு மீண்டும் அக்ஸர் படேல் சேர்க்கப்பட்டார்.

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்.

வங்கதேச அணி:

நஜ்முல் ஹுசைன் ஷாண்டோ, லிட்டன் தாஸ், ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), அஃபிஃப் ஹுசைன், யாசிர் அலி, மொசாடெக் ஹுசைன், ஷோரிஃபுல் இஸ்லாம், நூருல் ஹசன் (விக்கெட் கீப்பர்), முஸ்தாஃபிசுர் ரஹ்மான், ஹசன் மஹ்மூத், டஸ்கின் அகமது.
 
முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ரோஹித் சர்மா 2 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். முதல் 3 போட்டிகளிலும் சரியாக ஆடாத கேஎல் ராகுல் மீது பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில், இந்த போட்டியில் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். தனது டிரேட்மார்க் ஷாட்களை ஆடிய ராகுல் 31 பந்தில் அரைசதம் அடித்து, அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்தார்.

விராட் கோலி நிலைத்து நின்று நிதானமாக ஆட, சூர்யகுமார் யாதவ் தனது வழக்கமான அதிரடி பேட்டிங்கை ஆடி 16 பந்தில் 30 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, ஹர்திக் பாண்டியா(5), தினேஷ் கார்த்திக்(7), அக்ஸர் படேல் ஏமாற்றமளித்தனர். ஆனால் மறுமுனையில் நிலைத்து ஆடிய விராட்  கோலி அரைசதம் அடித்தார். இந்த உலக கோப்பையில் ஏற்கனவே பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்துக்கு எதிராக அரைசதம் அடித்த கோலி, 3வது அரைசதத்தை இன்று அடித்தார்.

பாகிஸ்தான் அணிக்கு மரண அடி.. காயத்தால் டி20 உலக கோப்பையிலிருந்து விலகிய அதிரடி வீரர்

19வது ஓவரில் கோலி சிக்ஸரும் பவுண்டரியும் அடிக்க, கடைசி ஓவரில் அஷ்வின் சிக்ஸரும் பவுண்டரியும் அடிக்க, 20 ஓவரில் இந்திய அணி 184 ரன்களை குவித்தது. விராட் கோலி 44 பந்தில் 64 ரன்களை குவித்தார். அஷ்வின் 6 பந்தில் 13 ரன்கள் அடித்தார்.
 

click me!