இந்தியா - பாகிஸ்தான் போட்டினா என்னனு எனக்கு அன்றைக்குதான் புரிந்தது..! விஜய் சங்கர் பகிர்ந்த சுவாரஸ்ய சம்பவம்

By karthikeyan VFirst Published Jun 28, 2020, 8:59 PM IST
Highlights

இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றால் என்னவென்பதை, தான் உணர்ந்த தருணம் பற்றி பகிர்ந்துள்ளார் விஜய் சங்கர்.
 

இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றால் என்னவென்பதை, தான் உணர்ந்த தருணம் பற்றி பகிர்ந்துள்ளார் விஜய் சங்கர்.

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டிகளில் அனல் பறக்கும். இந்தியா - பாகிஸ்தன் போட்டி  மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு  தாறுமாறாக இருக்கும். இரு அணி வீரர்களுமே களத்தில் மிக தீவிரமாக ஆடுவார்கள். 

இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்பது இந்தியர்களுக்கும் பாகிஸ்தானியர்களுக்கும் வெறும் விளையாட்டல்ல. அது ஒரு உணர்வு. 

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக இந்தியா-பாகிஸ்தான் இடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர்கள் நடப்பதில்லை. ஐசிசி நடத்தும் சர்வதேச தொடர்களில் மட்டுமே இரு அணிகளும் மோதுகின்றன.

இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றால் என்ன என்பதை உணர்ந்த தருணம் குறித்து விஜய் சங்கர் பகிர்ந்துள்ளார். 2019ல் இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பையில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. அந்த போட்டியில் விஜய் சங்கரும் ஆடினார். அந்த போட்டிக்கு முந்தைய நாள் நடந்த சம்பவம் குறித்து விஜய் சங்கர் பகிர்ந்துள்ளார். 

மான்செஸ்டரில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உலக கோப்பை போட்டி நடந்தது. உலக கோப்பையில் பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்தியதேயில்லை என்ற ரெக்கார்டை, அந்த போட்டியிலும் வென்று இந்திய அணி தக்கவைத்தது. 

மான்செஸ்டரில் அந்த போட்டிக்கு முந்தைய நாள் நடந்த சம்பவம் குறித்து விஜய் சங்கர் பகிர்ந்துள்ளார். அதுகுறித்து பேசிய விஜய் சங்கர், நான் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆடுகிறேன் என்பது முந்தைய நாள் தான் எனக்கு தெரியும். அன்றைய நாள் நாங்கள் சில வீரர்கள் ஒன்றாக சேர்ந்து காஃபி ஷாப்புக்கு சென்றோம். அங்கு இருந்த பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் எங்களிடம் வந்து எங்களை படுமோசமாக திட்டினார். நாங்கள் பதில் எதுவும் பேசாமல், அவரது வசைகளை வாங்கி கொண்டிருந்தோம். எங்களை திட்டுவதை ரெக்கார்டு செய்துவைத்தார். அவர் என்னதான் செய்கிறார் என்று நாங்கள் பொறுமையாக பார்த்துக்கொண்டிருந்தோம். அந்த சம்பவத்தை என்னால் மறக்கவே முடியாது. அப்போதுதான், இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றால், எனக்கு என்னவென்பதே புரிந்தது என்று விஜய் சங்கர் தெரிவித்துள்ளார். 
 

click me!