உலக கோப்பையில் அவங்க 2 பேரில் ஒருத்தரை 4ம் வரிசையில் இறக்கலாம்!! முன்னாள் தேர்வுக்குழு தலைவர் அதிரடி

By karthikeyan VFirst Published Apr 10, 2019, 10:29 AM IST
Highlights

உலக கோப்பை நெருங்கிய நிலையில், இந்திய அணியின் 4ம் வரிசை சிக்கல் தீர்வு காணப்படாமலேயே உள்ளது. 
 

உலக கோப்பை நெருங்கிய நிலையில், இந்திய அணியின் 4ம் வரிசை சிக்கல் தீர்வு காணப்படாமலேயே உள்ளது. 

உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக இந்திய அணி பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் மற்றும் பவுலிங் வலுவாக உள்ளது. ஆனால் நீண்டகால சிக்கலாக இருந்துவரும் நான்காம் வரிசை சிக்கலுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை. 

ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், ரெய்னா, மனீஷ் பாண்டே என பலரை அந்த வரிசையில் பரிசோதித்த பிறகு, ராயுடு உறுதி செய்யப்பட்டார். ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ராயுடு சொதப்பினார். ஸ்விங் பவுலிங்கை எதிர்கொண்டு ஆட திணறுகிறார். அதேபோல மித வேகப்பந்து வீச்சையும் எதிர்கொள்ள ராயுடு திணறுகிறார். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சொதப்பியதை அடுத்து, ராயுடு இந்திய அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். உலக கோப்பைக்கு முந்தைய கடைசி தொடரில் ராயுடு அணியிலிருந்து நீக்கப்பட்டது, அந்த இடத்திற்கு இந்திய அணி நிர்வாகம் வேறு வீரரை தேடுவதை உறுதிப்படுத்தியது. 

ராயுடு சொதப்பிய அதேவேளையில், விஜய் சங்கர் மிடில் ஆர்டரில் நன்றாக ஆடினார். எனவே விஜய் சங்கரை 4ம் வரிசையில் இறக்கினால், ஒரு பவுலிங் ஆப்சனும் கூடுதலாக கிடைக்கும். விஜய் சங்கர் நல்ல ஃபீல்டரும் கூட. மிடில் ஓவர்களில் சிங்கிள் ரொடேட் செய்து ஆடுவதோடு, பெரிய ஷாட்டுகளையும் ஆடுகிறார் விஜய் சங்கர். எனவே விஜய் சங்கர் நான்காம் வரிசைக்கு சரியாக இருப்பார்.

ஆனால் நான்காம் வரிசைக்கு பல முன்னாள் ஜாம்பவான்களும் பல பெயர்களை பரிந்துரைத்து வருகின்றனர். ரிஷப் பண்ட்டின் பெயரை பாண்டிங்கும், ராயுடுவின் பெயரை ஹைடனும், விஜய் சங்கரின் பெயரை சிலரும் புஜாராவின் பெயரை கங்குலியும் பரிந்துரைத்துள்ளனர். 

சூழலுக்கு ஏற்றவாறு விராட் கோலியை நான்காம் வரிசையில் இறக்குவதற்கான திட்டங்களை கூட இந்திய அணி வைத்துள்ளது. இவ்வாறு 4ம் வரிசை குறித்த விவாதங்கள் இன்னும் நடந்துகொண்டே இருக்கின்றன. 

இதற்கிடையே, நான்காம் வரிசை வீரர் குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் கேப்டன் கபில் தேவ், நான்காம் வரிசை குறித்த பல விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. ஆனால் நான்காம் வரிசை இவருக்குத்தான் என்று ஒதுக்குவதை விட சூழலுக்கு ஏற்றவாறு எந்த வீரரையும் எந்த வரிசையிலும் இறக்கலாம். அனைவருமே சிறந்த வீரர்களாகத்தான் உள்ளனர். எனவே ஒவ்வொரு வீரருக்கும் ஒரு இடத்தை ஒதுக்குவதற்கு பதிலாக சூழலுக்கு ஏற்றவாறு வீரர்களை இறக்குவதே சிறந்தது என்று தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், நான்காம் வரிசை குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் தேர்வுக்குழு தலைவர் திலீப் வெங்சர்க்கார், இந்திய அணியில் நிறைய திறமையான வீரர்கள் உள்ளனர். கேஎல் ராகுல் அல்லது ரஹானேவை நான்காம் வரிசையில் இறக்கலாம். மயன்க் அகர்வால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அருமையாக ஆடினார். ஆனால் அவரது பெயரை பரிசீலிக்காதது எனக்கு வியப்பாக இருக்கிறது என்று வெங்சர்க்கார் தெரிவித்துள்ளார். 

click me!