இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் தமிழகத்தை சேர்ந்த ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி முதல் முறையாக இந்திய அணியில் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தை சேர்ந்த ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்தி, ஐபிஎல் 13வது சீசனில்(2019 ஐபிஎல்) கேகேஆர் அணிக்காக அபாரமாக பந்துவீசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். ஐபிஎல்லில் சிறப்பாக பந்துவீசியதன் விளைவாக, ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான டி20 அணியில் வருண் சக்கரவர்த்தி இடம்பெற்றார். ஆனால் காயம் காரணமாக அவர் அந்த தொடரில் ஆடமுடியாமல் போனது.
காயத்திலிருந்து மீண்ட வருண் சக்கரவர்த்தி, அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்தார். ஆனால் யோ யோ ஃபிட்னெஸ் டெஸ்ட்டில் தேறாததால், அந்த தொடரிலிருந்து நீக்கப்பட்டார்.
இதையடுத்து 3வது முறையாக இலங்கை சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணியில் இடம்பெற்று இலங்கை சென்றுள்ள வருண் சக்கரவர்த்தி, இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை.
அடுத்ததாக டி20 தொடர் நடக்கவுள்ளது. நாளை(25ம் தேதி) முதல் டி20 போட்டி நடக்கவுள்ள நிலையில், அந்த போட்டிக்கான இந்திய அணியில் வருண் சக்கரவர்த்திக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ள அனைத்து வீரர்களுக்கும் ஆட வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உறுதியாக இருப்பதால், ஸ்பின்னர் வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு கண்டிப்பாக கிடைக்கும். அதை அவர் எவ்வாறு பயன்படுத்திக்கொள்கிறார் என்பதைத்தான் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.