பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வாண்டெர் டசனின் அபார சதத்தால் சவாலான இலக்கை நிர்ணயித்துள்ளது தென்னாப்பிரிக்க அணி.
பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துள்ளது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று செஞ்சூரியனில் நடக்கிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணி, வாண்டெர் டசனின் அபார சதத்தால் 50 ஓவரில் 273 ரன்களை குவித்துள்ளது. தென்னாப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்கள் டி காக்(20), மார்க்ரம்(19) ஆகிய இருவரையும் 7வது ஓவரில் வீழ்த்தினார் ஷாஹீன் அஃப்ரிடி.
அதன்பின்னர் கேப்டன் டெம்பா பவுமா மற்றும் ஹென்ரிச் க்ளாசன் ஆகிய இருவருமே தலா ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, 14.2 ஓவரில் தென்னாப்பிரிக்க அணி வெறும் 55 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துவிட்டது.
அந்த இக்கட்டான நிலையிலிருந்து வாண்டெர் டசனும் டேவிட் மில்லரும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து தென்னாப்பிரிக்க அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த மில்லர் 50 ரன்னில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஃபெலுக்வாயோ, ரபாடா ஆகியோரை ஒருமுனையில் நிறுத்திக்கொண்டு, மறுமுனையில் அபாரமாக ஆடி சதமடித்த வாண்டெர் டசன் 134 பந்தில் 10 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 123 ரன்களை குவித்து கடைசி வரை களத்தில் நின்று 50 ஓவரில் தென்னாப்பிரிக்க அணி 273 ரன்களை குவிக்க காரணமாக இருந்தார்.
வாண்டெர் டசனின் அபாரமான பேட்டிங்கால் 273 ரன்கள் என்ற நல்ல ஸ்கோரை அடித்து, 274 ரன்கள் என்ற சவாலான இலக்கை பாகிஸ்தானுக்கு நிர்ணயித்துள்ளது தென்னாப்பிரிக்க அணி.