அந்த ஓவர்த்ரோவுக்கு 6 ரன் கொடுத்தது தப்புதான்.. ஆனால் அதுக்கு நான் வருத்தப்படல.. தப்பை ஒத்துகிட்டாலும் கெத்தை விட்டுக்கொடுக்காத தர்மசேனா

By karthikeyan VFirst Published Jul 22, 2019, 10:33 AM IST
Highlights

உலக கோப்பை இறுதி போட்டியின் கடைசி ஓவரில் கப்டில் வீசிய ஓவர்த்ரோவிற்கு 6 ரன்கள் வழங்கியது தவறுதான் என்பதை டிவியில் பார்த்து அறிந்துகொண்டதாக அம்பயர் தர்மசேனா தெரிவித்துள்ளார். 

உலக கோப்பை வரலாற்றில் இந்த முறை நடந்த இறுதி போட்டி மாதிரி ஒரு போட்டி நடந்ததேயில்லை. ஒரு இறுதி போட்டிக்கு இருக்க வேண்டிய அனைத்து பரபரப்புகளும் இருந்தன. போட்டி முடியும் கடைசி நொடி வரை பயங்கர த்ரில்லாக இருந்தது. 

242 ரன்கள் என்ற இலக்கை இங்கிலாந்து விரட்டும்போது போட்டி டிரா ஆனதால், சூப்பர் ஓவர் போடப்பட்டு, அதுவும் டிராவில் முடிந்ததால், இறுதி போட்டியில் அதிக பவுண்டரிகள் அடித்த அணி என்பதன் அடிப்படையில் ஐசிசி விதிப்படி இங்கிலாந்து வெற்றி பெற்று கோப்பையை வென்றது. 

இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அந்த ஓவரின் நான்காவது பந்தில் தான் ஆட்டம் தலைகீழாக மாறியது. முதல் இரண்டு பந்துகளை அபாரமாக வீசிய போல்ட், மூன்றாவது பந்தில் சிக்ஸர் கொடுத்தார். 

நான்காவது பந்தில் ஸ்டோக்ஸ் அடித்துவிட்டு இரண்டு ரன்கள் ஓட, அந்த பந்தை பிடித்து கப்டில் த்ரோ அடிக்க, அந்த பந்து, ரன் ஓடும்போது டைவ் அடித்த ஸ்டோக்ஸின் பேட்டில் பட்டு பவுண்டரிக்கு சென்றது. ஸ்டோக்ஸ் வேண்டுமென்றே தெரிந்து அந்த பந்தை தடுக்காததால், அவர்கள் ஓடிய 2 ரன்களையும் சேர்த்து 6 ரன்கள் வழங்கப்பட்டது. ஸ்டோக்ஸ் தனது பேட்டில் பந்து பட்டு பவுண்டரியை நோக்கி ஓடியதுமே, உடனடியாக மண்டியிட்டு இரண்டு கைகளையும் மேலே உயர்த்தி, தான் வேண்டுமென்றே செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்தினார். அதுவரை நியூசிலாந்து வசம் இருந்த போட்டி, அதன்பிறகுதான் இங்கிலாந்து வசம் வந்தது. அதன்பின்னர் போட்டி டிராவில் முடிந்தது. 

அந்த எக்ஸ்ட்ரா ரன் தான் ஆட்டத்தின் திருப்புமுனையாகவே அமைந்தது. ஆனால் அதற்கு 6 ரன்கள் கொடுத்திருக்கக்கூடாது என்றும் கள நடுவர்கள் அவசரப்பட்டு சரியாக சோதிக்காமல் 6 ரன்கள் கொடுத்துவிட்டதாகவும் அம்பயர் சைமன் டஃபெல் தெரிவித்தார். ஐசிசி விதிப்படி, இதுபோன்று த்ரோ விடப்படும் பந்து பேட்டில் பட்டு பவுண்டரிக்கு சென்றால் என்ன செய்ய வேண்டும், எத்தனை ரன்கள் கொடுக்க வேண்டும் என்று விதி உள்ளது.

அதன்படி, ஃபீல்டர் பந்தை த்ரோ விடும் சமயத்தில், இரண்டு பேட்ஸ்மேன்களும் ரன் ஓடும்போது ஒருவரையொருவர் கடந்திருந்தால் அவர்கள் ஓடிய இரண்டு ரன்களையும் சேர்த்து பவுண்டரியுடன் மொத்தமாக 6 ரன்கள் கொடுக்கலாம். ஆனால் உலக கோப்பை இறுதி போட்டியில் கப்டில் த்ரோ விட ஸ்டார்ட் செய்யும்போது, ஸ்டோக்ஸும் அடில் ரஷீத்தும் ஒருவரையொருவர் கடக்கவில்லை என்பதால் அதற்கு 5 ரன்கள் தான் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் கள நடுவர்கள் அதை சரியாக கவனிக்காமல் 6 ரன்கள் கொடுத்துவிட்டனர் என்று சைமன் டஃபெல் தெரிவித்திருந்தார். 

இதையடுத்து அதுவும் ஒரு பெரிய விவாதமானது. இந்நிலையில் ஓவர்த்ரோ விதி மறுபரிசீலனை செய்யப்படவுள்ளது. ஐசிசி விதிகளின் காப்பகமாகவும் பாதுகாவலர்களாகவும் இருக்கும் மேரிலெபோன் கிரிக்கெட் கிளப், ஓவர் த்ரோ விதிகளை மறுபரிசீலனை செய்யவுள்ளதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில், அந்த ஓவர்த்ரோவிற்கு 6 ரன்கள் கொடுத்த இலங்கையை சேர்ந்த அம்பயர் தர்மசேனா, தான் செய்தது தவறுதான் என்று ஒப்புக்கொண்டுள்ளார். இதுகுறித்து பேசிய தர்மசேனா, அந்த ஓவர்த்ரோவிற்கு 6 ரன்கள் வழங்கியது தவறுதான் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் டிவியில் பார்த்துத்தான் அது தவறு என்பதை உணர்ந்தேன். 

களத்தில் அம்பயரிங் செய்துகொண்டிருக்கும்போது டிவி ரிப்ளே பார்ப்பதற்கெல்லாம் வாய்ப்பில்லை. அந்த கணத்தில் முடிவெடுக்க வேண்டும். டிவி ரிப்ளேவில் பார்த்துவிட்டு பலரும் பலவிதமாக பேசலாம். ஆனால் களத்தில் அந்த கணத்தில் முடிவெடுக்க வேண்டும். எனவே நான் 6 ரன்கள் கொடுத்தது தவறுதான் என்றாலும் அதற்காக நான் வருத்தப்படவில்லை. 

இதுபோன்ற விவகாரங்களில் விக்கெட்டுக்கான ஆப்சன் இல்லாத பட்சத்தில், தேர்டு அம்பயருடன் ஆலோசிக்க வேண்டும் என்ற எந்த விதியும் இல்லை. அதனால் நான் களத்தில் இருந்த லெக் அம்பயருடன் ஆலோசித்துவிட்டு, பேட்ஸ்மேன்கள் ரன்னை ஓடி முடித்துவிட்டனர் என்பதை உறுதிப்படுத்தியதால் அந்த முடிவை எடுத்தேன். 

ஒரே நேரத்தில் கள நடுவர்கள் பல விஷயங்களை கவனிக்க வேண்டும். ஃபீல்டர் பந்தை பிடிப்பது, பேட்ஸ்மேன்கள் ரன் ஓடுவது என அனைத்தையுமே கள நடுவர்கள் கண்காணிக்க வேண்டும் என்பதை அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும். ஃபீல்டர் த்ரோவிட்ட பந்து, ஸ்டம்புக்கு வருவதற்குள் ஸ்டோக்ஸ் இரண்டாவது ரன்னை ஓடி முடித்துவிட்டார். எனவே ஃபீல்டர் பந்தை த்ரோ செய்வதற்கு முன்னர், இரு பேட்ஸ்மேன்களும் ஒருவரையொருவர் க்ராஸ் செய்துவிட்டார்கள் என்று எண்ணித்தான் அந்த முடிவு எடுக்கப்பட்டது என்று தர்மசேனா தெரிவித்துள்ளார். 

click me!