பிட்ச் நல்லா ரெடி பண்ணியிருந்தீங்க!கான்பூர் மைதான ஊழியர்களுக்கு தனது சொந்த பணத்தில் ரூ.35,000 கொடுத்த டிராவிட்

By karthikeyan VFirst Published Nov 29, 2021, 9:34 PM IST
Highlights

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடந்த கான்பூர் மைதான ஊழியர்களுக்கு, ஆடுகளத்தை நன்றாக தயார் செய்ததற்காக தனது சொந்த பணத்தில் இருந்து ரூ.35,000 வழங்கியுள்ளார் ராகுல் டிராவிட்.
 

இந்தியா - நியூசிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடந்தது. கடந்த 25ம் தேதி தொடங்கி நடந்த இந்த போட்டி டிராவில் முடிந்தது.  இன்றுடன் இந்த போட்டி முடிவடைந்தது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 345 ரன்கள் அடித்தது. இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 296 ரன்கள் அடித்தது. 49 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி, 7 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது. மொத்தமாக 283 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, 284 ரன்களை நியூசிலாந்துக்கு இலக்காக நிர்ணயித்தது.

284 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணி, 89.2 ஓவரில் 9 விக்கெட்டுகளை இழந்த நிலையில், அடுத்த 9 ஓவரில் விக்கெட்டே விழாமல் கவனமாக ஆடினர் ராச்சின் ரவீந்திரா - அஜாஸ் படேல். இந்திய வம்சாவழியை சேர்ந்த இவர்கள் இருவரின் சிறப்பான பேட்டிங்கால் போட்டி டிரா ஆனது. அஷ்வின், ஜடேஜா, அக்ஸர் படேல் ஆகிய 3 தரமான ஸ்பின்னர்களை வைத்திருந்தும் இந்திய அணியால் கடைசி ஒரு விக்கெட்டை வீழ்த்த முடியாமல் வெற்றியை தவறவிட்டது.

இந்த டெஸ்ட் போட்டி நடந்த கான்பூர் பிட்ச்சில் கணிக்கமுடியாத அளவிற்கு பவுன்ஸ் இருந்தது. ஆனால் வழக்கமான இந்திய ஆடுகளங்களை போல ஸ்பின்னிற்கு பெரியளவிற்கு ஆதரவாக இல்லை.

கான்பூர் ஆடுகளத்தில் கணிக்க முடியாத பவுன்ஸ் இருந்தாலும், கடைசி நாள் வரை பிட்ச் ஓரளவிற்கு நன்றாகவே இருந்தது. இந்நிலையில், நல்ல ஸ்போர்ட்டிங்கான பிட்ச்சை தயார் செய்ததற்காக கான்பூர் மைதான ஊழியர்களுக்கு தனது சொந்த பணத்தில் இருந்து ரூ.35,000 வழங்கியிருக்கிறார் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்.

ராகுல் டிராவிட் ரூ.35,000 வழங்கிய விஷயத்தை உத்தர பிரதேச கிரிக்கெட் சங்கம் தெரிவித்தது. ராகுல் டிராவிட் மிகவும் நேர்மையான, நல்ல மனமும் குணமும் கொண்ட மனிதர் என்பது அனைவரும் அறிந்ததே. மற்றவர்களிடம் இருந்து அவரை தனித்து காட்டுவதே அவரது குணநலன்கள் தான். 

அந்தவகையில் அவரது நல்ல குணத்தை மீண்டும் ஒருமுறை பறைசாற்றும் விதமாக இந்த செயல் அமைந்துள்ளது.
 

click me!