இந்தியா - நியூசிலாந்து இடையேயான கடைசி டி20 போட்டியில், பந்துவீச ஒதுக்கிய நேரத்தைவிட ஒரு ஓவர் தாமதமாக வீசியதற்காக இந்திய அணிக்கு 20% சதவிகித போட்டி ஊதியம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - நியூசிலாந்து இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 5-0 என நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்து வென்றது. இந்த தொடரின் கடைசி 2 போட்டிகளில் நியூசிலாந்து எளிதாக வென்றிருக்கலாம். ஆனால் அழுத்தத்தை கையாள தெரியாத அந்த அணியின் வீரர்கள் பதற்றத்தில் பந்தை தூக்கி தூக்கி அடித்து ஆட்டமிழந்ததால் அந்த அணியின் வெற்றி பறிபோனது. அதனால் இந்திய அணி வெற்றி பெற்றது.
நான்காவது போட்டியில் 166 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய நியூசிலாந்து அணி சரியாக 165 ரன்கள் அடித்ததால், போட்டி டை ஆனது. பின்னர் வீசப்பட்ட சூப்பர் ஓவரில் இந்திய அணி வெற்றி பெற்றது. மிகவும் பரபரப்பாக இருந்த அந்த போட்டியில், இந்திய அணி, 2 ஓவர்களை வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டது. எனவே ஒரு ஓவருக்கு 20% வீதம் 2 ஓவருக்கு 40% ஊதியத்தை அபராதமாக விதித்தது ஐசிசி.
அதேபோல கடைசி டி20 போட்டியில் இந்திய அணி ஒரு ஓவரை வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டது. எனவே வீரர்களின் போட்டி ஊதியத்தில் 20% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.