முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது இந்திய அணி

By karthikeyan VFirst Published Oct 3, 2019, 4:20 PM IST
Highlights

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், 502 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது இந்திய அணி. 
 

விசாகப்பட்டினத்தில் நேற்று தொடங்கி நடந்துவரும் இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது. இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ரோஹித் சர்மாவும் மயன்க் அகர்வாலும் நிதானமாகவும் அதேநேரத்தில் அடித்தும் ஆடினர். விக்கெட்டை விட்டுக்கொடுக்காமல் கவனமாக ஆடிய அதேவேளையில் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினர். 

டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக இறங்கிய முதல் போட்டியிலேயே அபாரமாக ஆடி சதமடித்த ரோஹித் சர்மா, இரட்டை சதத்தை நோக்கி பயணித்து கொண்டிருந்த நிலையில் மயன்க் அகர்வாலும் சதம் அடித்தார். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ரோஹித் சர்மா 176 ரன்களில் ஆட்டமிழந்து முதல் இரட்டை சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். முதல் விக்கெட்டுக்கு ரோஹித்தும் மயன்க் அகர்வாலும் இணைந்து 317 ரன்களை குவித்து பல சாதனைகளை படைத்தனர். 

ரோஹித்தின் விக்கெட்டுக்கு பிறகு களத்திற்கு வந்த புஜாரா 6 ரன்களிலும் கேப்டன் கோலி 20 ரன்களிலும் ஆட்டமிழக்க, மயன்க் அகர்வாலுடன் ரஹானே ஜோடி சேர்ந்தார். சிறப்பாக ஆடிய மயன்க் அகர்வால், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் இரட்டை சதத்தை விளாசி அசத்தினார். ரஹானே 15 ரன்களில் ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து மயன்க் அகர்வாலும் 215 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். 

விஹாரி 10 ரன்களில் ஆட்டமிழக்க, ரிதிமான் சஹா அதிரடியாக ஆடி சில பவுண்டரிகளை விளாசினார். 16 பந்துகளில் 21 ரன்கள் அடித்து விஹாரி வெளியேற, அதன்பின்னர் ஜடேஜாவுடன் ஜோடி சேர்ந்த அஷ்வின், ரன் எடுக்க முடியாமல் திணறினார். இதையடுத்து அவர்கள் இருவரும் களத்தில் இருந்தபோதே 502 ரன்களுக்கு இந்திய அணி முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. 

இதையடுத்து தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸை ஆடிவருகிறது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக எல்கரும் மார்க்ரமும் இறங்கியுள்ளனர். 
 

click me!