#RSAvsPAK 2வது ODI: தனி ஒருவனாக போராடி கடைசியில் இரட்டை சதத்தை தவறவிட்ட ஃபகர் ஜமான்..! தென்னாப்பிரிக்கா வெற்றி

By karthikeyan VFirst Published Apr 5, 2021, 2:35 PM IST
Highlights

ஃபகர் ஜமான் தனி நபராக போராடி 193 ரன்களை குவித்த போதிலும், பாகிஸ்தான் அணியால் தென்னாப்பிரிக்கா நிர்ணயித்த இலக்கை விரட்ட முடியாமல் 17 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
 

பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது போட்டி நேற்று ஜோஹன்னஸ்பர்க்கில் நடந்தது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய தென்னாப்பிரிக்க அணி, டி காக்(80), டெம்பா பவுமா(92), வாண்டெர் டசன்(60), டேவிட் மில்லர்(50) ஆகியோரின் சிறப்பான பேட்டிங்கால் 50 ஓவரில் 341 ரன்களை குவித்தது.

342 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய பாகிஸ்தான் அணியில், தொடக்க வீரர் ஃபகர் ஜமானை தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை. ஒருமுனையில் ஃபகர் ஜமான் சிறப்பாக ஆட, மறுமுனையில் இமாம் உல் ஹக்(6), பாபர் அசாம்(31), முகமது ரிஸ்வான்(0), டானிஷ் அஜீஸ்(9), ஷதாப் கான்(13), ஆசிஃப் அலி(19), ஃபஹீம் அஷ்ரஃப்(11) என தொடக்கம் முதலே, எந்த வீரருமே ஃபகர் ஜமானுக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் தனி ஒருவனாக போராடிய ஃபகர் ஜமான், சதமடித்தார். சதத்திற்கு பின்னரும் அதிரடியாக ஆடி இரட்டை சதத்தை நோக்கி நகர்ந்ததுடன், பாகிஸ்தான் அணியையும் இலக்கை நோக்கி பயணிக்க செய்தார். ஆனால் மறுமுனையில் தொடர்ந்து விக்கெட்டுகள் விழுந்ததால், கடைசி கட்டத்தில் நெருக்கடி அதிகரிக்க, கடைசி ஓவரில் 193 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் ஃபகர் ஜமான். கடைசி ஓவரின் முதல் பந்தில் 9வது விக்கெட்டாக ஃபகர் ஜமான் ஆட்டமிழந்த போது பாகிஸ்தான் அணியின் ஸ்கோர் 312 ரன்கள்.

ஏற்கனவே ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமடித்த ஃபகர் ஜமான், 2வது முறையாக இரட்டை சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இதையடுத்து 50 ஓவரில்  பாகிஸ்தான் அணி 324 ரன்கள் அடிக்க, 17 ரன் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது. இதையடுத்து ஒருநாள் தொடர் 1-1 என சமனடைந்துள்ளது.
 

click me!