India vs South Africa: 2வது ஒருநாள் போட்டியிலும் இந்தியவை வீழ்த்தி தொடரை வென்றது தென்னாப்பிரிக்கா

By karthikeyan VFirst Published Jan 22, 2022, 7:39 AM IST
Highlights

2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2-0 என ஒருநாள் தொடரை வென்றது தென்னாப்பிரிக்கா.
 

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான டெஸ்ட் தொடரை தென்னாப்பிரிக்க அணி 2-1 என வென்றது. அதைத்தொடர்ந்து ஒருநாள் தொடர் நடந்துவருகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது போட்டி நேற்று பார்லில் நடந்தது.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீரர் தவான் 29 ரன்களில் ஆட்டமிழக்க, கோலி டக் அவுட்டானார். 64 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துவிட்ட இந்திய அணியை கேஎல் ராகுலும் ரிஷப் பண்ட்டும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடி காப்பாற்றினர். ரிஷப் பண்ட் அதிரடியாக  ஆடி அரைசதம் அடிக்க, ராகுலும் அரைசதம் அடித்தார். இருவரும் இணைந்து 3வது விக்கெட்டுக்கு 115 ரன்களை சேர்த்தனர்.

ராகுல் 55 ரன்னிலும், ரிஷப் பண்ட் 85 ரன்னிலும் ஆட்டமிழக்க,  ஷ்ரேயாஸ் ஐயர் (11) மற்றும் வெங்கடேஷ் ஐயர் (22) சோபிக்கவில்லை. ஷர்துல் தாகூர் 40 ரன்களும், அஷ்வின் 25 ரன்களும் அடித்து பங்களிப்பு செய்ய, இந்திய அணி 50 ஓவரில் 287 ரன்கள் அடித்தது.

288 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்க அணியின் பேட்ஸ்மேன்கள் முதல் போட்டியை போலவே அபாரமாக பேட்டிங் ஆடினர். தொடக்க வீரர்கள் டி காக்கும் ஜே மலானும் அடித்து ஆடி முதல் விக்கெட்டுக்கு 132 ரன்களை குவித்தனர். இருவருமே அரைசதம் அடித்த நிலையில், டி காக் 66 பந்தில் 78 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அபாரமாக ஆடிய ஜே மலான் 91 ரன்னில் ஆட்டமிழந்து 9 ரன்னில் சதத்தை தவறவிட்டார். டெம்பா பவுமா 35 ரன்கள், மார்க்ரம் மற்றும் வாண்டர் டசன் ஆகிய இருவரும் தலா 37 ரன்கள் பங்களிப்பு செய்ய,  தென்னாப்பிரிக்க அணி 49வது ஓவரிலேயே இலக்கை அடித்து அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் 2-0 என ஒருநாள் தொடரை வென்றது தென்னாப்பிரிக்க அணி.
 

click me!