உலக கோப்பையை அந்த 2 டீம்ல ஒண்ணுதான் ஜெயிக்கும்!! ஆஸி., முன்னாள் வீரர் அதிரடி

By karthikeyan VFirst Published Apr 6, 2019, 2:25 PM IST
Highlights

ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாமல் கடந்த ஓராண்டாக திணறிவந்த ஆஸ்திரேலிய அணி, இந்திய மண்ணில் இந்திய அணியையும் அதன்பின்னர் பாகிஸ்தான் அணியையும் வீழ்த்தி புது உத்வேகத்துடன் காணப்படுகிறது. 

உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், உலக கோப்பைக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகிவருகின்றன. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி ஆகிய இரு அணிகளில் ஒன்றுதான் உலக கோப்பையை வெல்லும் என பெரும்பாலான முன்னாள் வீரர்கள் கணித்து கருத்து தெரிவித்துள்ளனர்.

வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் ஆக்ரோஷமாக ஆடிவருகிறது. அந்த அணியில் கப்டில், வில்லியம்சன், டெய்லர், லதாம், கிராண்ட் ஹோம் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். எனவே அந்த அணியும் உலக கோப்பையில் கடும் சவாலான அணியாக திகழும். 

ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாமல் கடந்த ஓராண்டாக திணறிவந்த ஆஸ்திரேலிய அணி, இந்திய மண்ணில் இந்திய அணியையும் அதன்பின்னர் பாகிஸ்தான் அணியையும் வீழ்த்தி புது உத்வேகத்துடன் காணப்படுகிறது. ஸ்மித் - வார்னர் இல்லாமலேயே அந்த அணி இந்திய அணியை வீழ்த்திவிட்டது. உஸ்மான் கவாஜா, ஆடம் ஸாம்பா, பாட் கம்மின்ஸ் ஆகியோர் நல்ல ஃபார்மில் அருமையாக ஆடிவருகின்றனர். எனவே ஸ்மித்தும் வார்னரும் அணிக்கு திரும்பிவிட்டால் வலுவான அணியாகிவிடும் ஆஸ்திரேலிய அணி. அதுமட்டுமல்லாமல் உலக கோப்பைக்கு அந்த அணியின் துணை பயிற்சியாளராக 2 உலக கோப்பையை வென்ற முன்னாள் கேப்டன் பாண்டிங் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே உலக கோப்பையில் ஆஸ்திரேலிய அணியும் கடும் சவாலான அணி தான்.

இதற்கிடையே, வெஸ்ட் இண்டீஸ் அணியும் அபாரமாக ஆடிவருகிறது. கெய்ல், ஷாய் ஹோப், ஹெட்மயர், பிராத்வெயிட், ஹோல்டர் என அந்த அணியும் வலுவாக திகழ்கிறது. இவை தவிர தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் அணிகளும் சிறந்த அணிகள்தான். யாரும் கண்டுகொள்ளாத ஆஃப்கானிஸ்தான் அணி சிறந்த கிரிக்கெட்டை ஆடிவருவதால் அந்த அணியை குறைத்து மதிப்பிட முடியாது. கண்டிப்பாக மிகப்பெரிய அணிகளுக்கு எல்லாம் ஆஃப்கானிஸ்தான் அணி கடும் சவாலாக திகழும். ஆசிய கோப்பையில் கூட இந்திய அணிக்கு கடும் சவாலாக திகழ்ந்தது. கடைசியில் இந்திய அணியால் போட்டியை டிரா செய்ய முடிந்ததே தவிர வெல்ல முடியவில்லை. அதனால் ஆஃப்கானிஸ்தான் அணியையும் எளிதாக எடைபோட்டு விட முடியாது. 

இவ்வாறு ஒவ்வொரு அணியுமே வலுவாக திகழும் நிலையில், பல முன்னாள் வீரர்களும் உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணியை கணித்து தங்களது கருத்தை தெரிவித்துவருகின்றனர்.

அந்த வகையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் சைமன் கேடிச்சும் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள சைமன் கேடிச், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் வலுவாக உள்ளன. இந்திய அணி சமபலம் வாய்ந்த அணியாக உள்ளது. ஜோஸ் பட்லர், ஸ்டோக்ஸ் ஆகிய வீரர்கள் இங்கிலாந்து அணியின் வெற்றி நாயகர்களாக திகழ்கின்றனர். இந்த இரண்டு அணிகளில் ஒன்று உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளது. அதேநேரத்தில் ஆஸ்திரேலிய அணியை குறைத்து மதிப்பிட முடியாது. ஆஸ்திரேலிய அணி சரியான நேரத்தில் வெகுண்டெழுந்துள்ளது என்றார். 
 

click me!